குளு, குளு சீசனை அனுபவிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்


குளு, குளு சீசனை அனுபவிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்
x

கொடைக்கானலில் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

திண்டுக்கல்

குளு, குளு சீசன்

சர்வதேச சுற்றுலாதலமான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

பகலில் வெப்பமான சூழல் நிலவிய போதிலும், மாலை நேரத்தில் மேக கூட்டங்கள் இதயத்தை வருடும் இதமான வானிலை நிலவியது. இதுமட்டுமின்றி கடந்த இரண்டு நாட்களாக இரவில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். இதனால் தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக், மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, குணா குகை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

பூத்துக்குலுங்கும் பூக்கள்

இதற்கிடையே மலர் கண்காட்சிக்கு ஆயத்தமாகி கொண்டிருக்கும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பல்லாயிரக்கணக்கான பல வண்ண பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. புன்னகை சிந்தும் இந்த பூக்கள் சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைத்து வருகிறது.

பூக்களை ரசிக்கும் சுற்றுலா பயணிகள் அதன் முன்பு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இதேபோல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

அணிவகுத்து நின்ற வாகனங்கள்

சுற்றுலா பயணிகளின் வருகை எதிரொலியாக, நகர்ப்பகுதியில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானல் ஏரிச்சாலையில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக நகரில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பின. 'ஹோம் ஸ்டே' எனப்படும் வீடுகளில் தங்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதேபோல் கிராம பகுதியில் கூடாரங்களிலும், பலூன் இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் தங்கி வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் நகர் மற்றும் கிராம பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொடைக்கானலில் நேற்று இரவு இடி இடித்தது. இதனால் இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் கொடைக்கானல் பகுதி இருளில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story