மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தல்; 3 பேர் கைது


மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 12 Nov 2022 6:45 PM GMT (Updated: 12 Nov 2022 6:45 PM GMT)

கழுகுமலையில் மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தியது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

கழுகுமலையில் மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தியது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனை

கழுகுமலை - அத்திப்பட்டி சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்புராஜ், ராஜ்மோகன் மற்றும் போலீசார் அத்திப்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகே வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் வந்த வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அவர் போலீசாரை கண்டதும் நிற்காமல் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டினார். இதையடுத்து போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

3 பேர் கைது

பின்னர் அவர் வைத்திருந்த சாக்கு மூட்ைடயை பிரித்து பார்த்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட 42 புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.8000 என கூறப்படுகிறது.

தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கழுகுமலை ஆறுமுகம் நகரைச் சேர்ந்த தேவராஜ் மகன் சில்வியன் (45) என்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த ரொக்கப்பணம் ரூ.32 ஆயிரம் மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில், கழுகுமலை அண்ணா புதுத்தெருவை சேர்ந்த பழனி என்பவர் மகன் சுரேஷ் கண்ணன் (28), தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா சின்னகாளாம்பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் பார்த்திபன் ஆகியோரிடம் சோதனை நடத்தி 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story