மணவாளக்குறிச்சி அருகே கர்ப்பிணி பெண் போலீஸ் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழப்பு


மணவாளக்குறிச்சி அருகே கர்ப்பிணி பெண் போலீஸ் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழப்பு
x

மணவாளக்குறிச்சி அருகே கர்ப்பிணி பெண் போலீஸ் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்து உள்ளார்.

மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்(38) கூலித் தொழிலாளி. இவரது மனைவி உஷா. இவர் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தற்போது உஷா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் உஷா மொபட்டில் வேலைக்கு சென்றார். வேலை முடிந்து இரவு 7 மணியளவில் வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டார். கட்டைக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது சாலையை கடந்து வீட்டுக்கு செல்வதற்காக தனது மொபட்டை திருப்பினார். அப்போது அந்த வழியாக வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் உஷாவின் மொபட் மீது வேகமாக மோதியது.

இதில் உஷா தூக்கி வீசப்பட்டார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த உஷாவிற்கு தலை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உஷாவை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உஷா அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உஷா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story