கடும் புகைமூட்டத்தால் சென்னை வரும் ரெயில்கள் தாமதம்: பயணிகள் அவதி


கடும் புகைமூட்டத்தால் சென்னை வரும் ரெயில்கள் தாமதம்: பயணிகள் அவதி
x

கடும் புகைமூட்டத்தால் சிக்னல் சரிவர தெரியாததால் தென் தமிழகத்தில் இருந்து சென்னைக்கு வரும் ரெயில்கள் தாமதமாக வருகின்றன.

சென்னை,

தமிழகத்தில் போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் பழைய பொருட்களை தீயிட்டு எரித்து போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இதனால் சென்னையில் புகைமூட்டம் அதிகரித்துள்ளது. அதிகாலை வேளையில் சராசரி அளவை விட புகைமூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

அத்துடன் சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. நகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் சென்னை மணலி பெருங்குடியில் 277 என்ற அளவில் மோசமான அளவில் உள்ளது. அத்துடன் எண்ணூர், அரும்பாக்கம், ராயபுரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றின் தரக்குறியீடு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் புகைமூட்டத்தால் விமான சேவையை தொடர்ந்து ரெயில் சேவையும் பாதிப்பை சந்தித்துள்ளது. கடும் புகைமூட்டத்தால் சிக்னல் சரிவர தெரியாததால் தென் தமிழகத்தில் இருந்து சென்னைக்கு வரும் ரெயில்கள் தாமதமாக வருகின்றன. இதனால் ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் அவதியடைந்துள்ளனர்.


Next Story