பஸ்சை கடத்திய வழக்கில் திருச்சி சிவா எம்.பி.யின் மகன் கைது


பஸ்சை கடத்திய வழக்கில் திருச்சி சிவா எம்.பி.யின் மகன் கைது
x

பஸ்சை கடத்திய வழக்கில் திருச்சி சிவா எம்.பி.யின் மகன் சூர்யாசிவாவை போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ஜனதா கட்சியினரை கைது செய்தபோது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி வயலூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சூர்யாசிவா. இவர் பா.ஜ.க.வில் ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச்செயலாளராக உள்ளார். இவர் திருச்சி சிவா எம்.பி.யின் மகன் ஆவார். சமீபத்தில் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த இவர், தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை தகுந்த நேரத்தில் வெளியிடுவதாக கூறி வந்தார்.

இந்நிலையில் சூர்யாசிவா மீது திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில், டிராவல்ஸ் ஏஜென்சி ஊழியரான திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த முருகானந்தம் (வயது40) என்பவர் நேற்று முன்தினம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

கடத்தல் புகார்

நான், திருச்சியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த 19-ந்தேதி இரவு திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தோம். அப்போது, சூர்யாசிவா மற்றும் சிலர் அங்கு வந்து பயணிகளை பஸ்சில் இருந்து இறங்கும்படி கூறினார்கள்.

நான் ஏன் பயணிகளை இறங்கும்படி கூறுகிறீர்கள்? என்று கேட்டதற்கு, கடந்த 11-ந்தேதி உங்கள் நிறுவன பஸ் எனது கார் மீது மோதியது. அதற்கு செலவான ரூ.5½ லட்சத்தை கொடுத்துவிட்டு பஸ்சை எடுத்துச்செல்லுங்கள் என்று கூறியதுடன், எங்களை திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர், பஸ்சை அவர் கடத்தி சென்றுவிட்டார். எனவே பஸ்சை மீட்டு, அவர் மற்றும் அவருடன் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கைது

அதன்பேரில் போலீசார், சூா்யாசிவா மற்றும் சிலர் மீது தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல், கூட்டுக்கொள்ளை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை சூர்யாசிவாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் திருச்சி ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

முற்றுகை-தள்ளுமுள்ளு

இதற்கிடையே சூர்யாசிவா கைது செய்யப்பட்டதை அறிந்த பா.ஜ.க.வினர் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் திரண்டு தரையில் அமர்ந்து தர்ணா செய்ததுடன், போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினர் 60 பேரை கைது செய்வதாக கூறிய போலீசார் அவர்களை போலீஸ் வேனில் ஏறும்படி கூறினர். ஆனால் அவர்கள் மறுத்ததால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மறியல்

இதனால் போலீசாரை கண்டித்து அவர்கள் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர்.


Next Story