இயற்கை எரிவாயு நிறுவன அலுவலகத்தை ராஜமுந்திரிக்கு மாற்ற முயற்சிப்பதா? வைகோ கண்டனம்


இயற்கை எரிவாயு நிறுவன அலுவலகத்தை ராஜமுந்திரிக்கு மாற்ற முயற்சிப்பதா? வைகோ கண்டனம்
x

இயற்கை எரிவாயு நிறுவன அலுவலகத்தை ராஜமுந்திரிக்கு மாற்ற முயற்சிப்பதா? வைகோ கண்டனம்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கிருஷ்ணா, கோதாவரி மற்றும் காவிரி படுகை எண்ணெய்-இயற்கை எரிவாயு நிறுவனங்களின் தலைமை அலுவலகம், மையப்பகுதியான சென்னை எழும்பூர் தாளமுத்து-நடராஜன் மாளிகையில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் ஒரு பகுதியான கிருஷ்ணா, கோதாவரி படுகைப்பிரிவு அலுவலகம் கடந்த 2005-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு மாற்றும் முயற்சியினை மேற்கொண்டபோது, அப்போதைய பெட்ரோலியத்துறை மந்திரி மணிசங்கர் ஐயர் மூலமாக அதை தடுத்து நிறுத்தினேன்.

இந்தநிலையில், தற்போது எந்த முகாந்திரமும் இல்லாமல் மீண்டும் கிருஷ்ணா, கோதாவரி படுகைப்பிரிவு அலுவலகத்தை எந்தவிதமான வலுவான காரணமும் இன்றி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு மாற்ற முயற்சிப்பதாக தெரியவருகிறது. அதனை உடனடியாகக் கைவிடவேண்டும். அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் கொண்ட இந்த அலுவலகத்தின் கிருஷ்ணா, கோதாவரி படுகைப் பிரிவில் தமிழக இளைஞர்கள் பலர் அதிகாரிகளாக பணியாற்றுகிறார்கள். இந்த அலுவலகம் மாற்றப்பட்டால், எண்ணற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும்.

தற்போதைய கணினி யுகத்தில் இந்த மாற்றம் தேவையற்றது. எனவே, ராஜமுந்திரிக்கு மாற்றும் இந்த முடிவை உடனடியாகக் கைவிடவேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story