தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம்


தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று கோலாகலமாக நடந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பனிமயமாதா ஆலயம்

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ந் தேதி தொடங்கி, ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி விழா நடந்தது. இந்த ஆண்டு ஆலயத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மாலையில் கொடிபவனி நடந்தது.

கொடியேற்றம்

நேற்று காலையில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. காலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 மணிக்கு 2-ம் திருப்பலி நடந்தது. காலை 7 மணிக்கு சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அன்னையின் கொடி ஆலயத்தை சுற்றி மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் காலை 8.50 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் கொடியை ஏற்றி வைத்தார்.

அப்போது புறாக்கள் பறக்கவிடப்பட்டன. பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த இழுவை கப்பல் மூலம் ஒலி எழுப்பப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் நேர்ச்சையாக வைத்த பால், பழம் உள்ளிட்டவற்றை மக்களுக்கு வழங்கினர்.

திரளான பக்தர்கள்

விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், பங்குத்தந்தை குமாரராஜா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

2 ஆண்டுகளுக்கு பிறகு கொடியேற்ற விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டதால், ஏராளமான பக்தர்கள் ஆலயத்துக்கு வந்து இருந்தனர். இதனால் பீச் ரோட்டில் வாகன போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டு இருந்தது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

சப்பர பவனி

ெதாடர்ந்து மதியம் 12 மணிக்கு கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி முதல்வர் ரூபஸ் பர்னான்டோ தலைமையில் அன்னைக்கு பொன்கிரீடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 31-ந் தேதி 6-ம் திருவிழா அன்று காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் புதுநன்மை திருப்பலி, 11.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் மறைமாவட்ட துறவியருக்கான திருப்பலி, மாலை 6.15 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் நற்கருணை பவனி நடக்கிறது.

அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி 10-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும், 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் சப்பரத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.


Next Story