வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 9 May 2023 6:45 PM GMT (Updated: 9 May 2023 6:46 PM GMT)

நாகை மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகை

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பள்ளி இறுதி வகுப்பு தோல்வி, 10-ம் வகுப்பு தேர்ச்சி, 12-ம் வகுப்பு, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகளை 31.3.2023-ந் தேதியில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுற்ற பொது பிரிவினரும், மேற்கண்ட கல்வித்தகுதிகளை பதிவு செய்து ஓராண்டு முடிவுற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் 1.4.2023 முதல் 30.6.2023 வரையிலான காலாண்டிற்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

ஆண்டு வருமானம்

இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பொதுப்பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரமாக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது மற்றும் வருமான உச்சவரம்பு கிடையாது. ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வயது வரம்பு 45-க்குள் இருக்க வேண்டும். இதர வகுப்பினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை பெற விரும்புவோர் தினசரி பள்ளி, கல்லூரி சென்று படிக்கும் மாணவராகவும், அரசு அல்லது தனியார் துறையிலோ பணிபுரிபவராக இருக்க கூடாது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் tnvelaivaaippu.gov.in என்ற இணையதள மூலம் விண்ணப்பத்தினை பதிவிறக்கும் செய்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story