தென் மாவட்டங்களுக்கு 'வந்தே பாரத்' ரெயில் வருமா? பொதுமக்கள் கருத்து


தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரெயில் வருமா? பொதுமக்கள் கருத்து
x
தினத்தந்தி 31 March 2023 8:45 PM GMT (Updated: 31 March 2023 8:45 PM GMT)

தென் மாவட்டங்களுக்கு ‘வந்தே பாரத்’ ரெயில் வருமா என்பது குறித்து ரெயில் பயணிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

தபால் துறை, தொலைதொடர்பு துறை, ரெயில்வே துறை போன்ற அன்றாடம் நம்மோடு பயணிக்கும் துறைகள் எல்லாம் ஆங்கிலேயர்கள் உருவாக்கி போனது.

கடந்த 76 ஆண்டுகளில் அந்தத் துறைகளை நாம் எந்த அளவில் நவீனமயமாக்கி இருக்கிறோம் என்று பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.

குறிப்பாக ரெயில்வே துறையை எடுத்து கொண்டால் நீராவி என்ஜினில் ரெயிலை இயக்கி பிறகு டீசல், மின்சாரம் என வளர்ந்து தற்போது நடுத்தர வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரெயில்கள், டிரைவர்களே இல்லாமல் இயங்கவிருக்கும் நவீன ரெயில் என்ற அளவிற்கு உயர்ந்து வருகிறோம். விரைவில் புல்லட் ரெயில்களும் இந்தியாவில் இயக்கும் நிலை ஏற்படும்.

வந்தே பாரத்

வந்தே பாரத் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ரெயில் இந்திய நகரங்களுக்கு இடையே நடுத்தர வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்தியாவில் முழுக்கமுழுக்க உள்நாட்டில் தயாரிக்கும் ('மேக் இன் இந்தியா') திட்டத்தின் கீழான முன்னெடுப்பில், சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் 18 மாத காலத்தில் தயாரிக்கப்பட்டது. இந்திய ரெயில்வே வரலாற்றில் இது ஒரு மைல்கல் ஆகும்.

1,148 இருக்கைகள் கொண்ட வந்தே பாரத் ரெயில்களில் 2 உயர் வகுப்பு பெட்டிகளும், 14 சாதாரண வகை பெட்டிகளும் உள்ளன. இவை அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்டவையாகும். இந்த ரெயிலில் என்ஜின் என்று தனியாக இருப்பதில்லை. டிரைவர்களுக்கு என்று ஒரு சிறிய அறை (கேபின்) மட்டுமே இருக்கும். ஒவ்வொரு பெட்டிகளுக்கு கீழேயும் என்ஜின் இருப்பதால் சீரான வேகம் அதிகரிப்பு, சீரான வேகம் குறைப்பு போன்றவை முறையாக நடைபெறும். இதனால் பெட்டிகளில் பயணம் செய்யும் போது அதிவேகத்தில் சென்றாலும் அதிர்வோ, குலுங்கலோ எதுவும் இல்லாமல் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை பயணத்தின் போது பயணிகள் உணரமுடியும். அதேநேரம் என்ஜின் டிரைவர் கேபினில் இருந்து கடைசி பெட்டியில் உள்ள ரெயில் கார்டு அறை வரை பயணிகள் செல்ல முடிகிறது.

சென்னை-கோவை

சென்னை-மைசூரு இடையே இந்த ரெயில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் கோவை-சென்னை இடையே வருகிற 8-ந்தேதி வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு குறிப்பாக சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரெயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருக்கிறது. இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டிருக்கும் கருத்துகள் வருமாறு:-

உரிய நடவடிக்கை

மதுரை ரெயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் இரா.பாண்டியராஜா கூறும் போது, 'சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டால்தான் பெரும்பாலான மக்கள் பயன் அடைவார்கள். தெற்கு ரெயில்வே நிர்வாகம் ஆண்டுதோறும் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரெயில்களை விட வேண்டும் என்று ஆர்வம் காண்பிப்பார்கள். ஆனால் ரெயில்களை விடுவதில்லை. தற்போது சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதால் இந்தப்பாதையில் வந்தே பாரத் ரெயிலை இயக்க வேண்டும். தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பலர் வேலை, கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சென்னையில் வசிக்கின்றனர். எனவே அனைவருடைய நலன் கருதி சென்னை- கன்னியாகுமரி இடையே வந்தே பாரத் விரைவு ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

தென்மாவட்டங்கள் பயன்பெறும்

பச்சைமுத்து (ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர், பழனி):- தமிழகத்தில் பெரும்பாலான ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ரெயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். இந்த நிலையில் அதிவேகமாக செல்லும் 'வந்தே பாரத்' ரெயில் சென்னை-கோவை இடையே விரைவில் தொடங்க இருக்கிறது. மத்திய அரசின் 'வந்தே பாரத்' ரெயில் திட்டம் மிகுந்த வரவேற்கத்தக்கது. அதேநேரம் தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் வந்தே பாரத் ரெயில் சேவையை செயல்படுத்த வேண்டியது அவசியம். இதில் சென்னை-கன்னியாகுமரி, கோவை-கன்னியாகுமரி இடையே 'வந்தே பாரத்' ரெயில் இயக்க வேண்டும். அதன்மூலம் ரெயில்வே துறைக்கு நல்ல வருவாய் கிடைக்கும். மக்களும் பயன்பெறுவார்கள். இதை தமிழக அரசும், தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

ஏமாற்றம்

ராஜேஸ்வரி (தனியார் நிறுவன அதிகாரி, திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம்):- ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ரெயில்கள் அறிவிக்கப்படும் போதும் தென்மாவட்ட மக்களுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. அதன்படி 'வந்தே பாரத்' ரெயிலும் தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு 'வந்தே பாரத்' ரெயிலை இயக்கினால் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் பயன்பெறுவார்கள். தென்மாவட்ட மக்கள் சென்னைக்கு செல்வதற்கும், அங்கு இருந்து திரும்பி வருவதற்கும் ரெயில்களில் இடம் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. மேலும் தென்மாவட்ட மக்கள் அனைத்து பகுதிகளிலும் வசிக்கின்றனர். எனவே 'வந்தே பாரத்' ரெயிலை சென்னையில் இருந்து திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக கன்னியாகுமாிக்கு இயக்க வேண்டும். அதன்மூலம் மக்கள் விரைவாக பயணம் செய்ய வசதியாக இருக்கும்.

பெரும் குறை

மாரியப்பன் (வணிகர், நிலக்கோட்டை):- தமிழகத்தில் முதல் 'வந்தே பாரத்' ரெயில் சென்னை-கோவை இடையே இயக்கப்படுகிறது. இந்தியாவில் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக கன்னியாகுமரி திகழ்கிறது. தமிழகத்தின் தென்எல்லையான கன்னியாகுமரி-சென்னையை இணைப்பது ரெயில் சேவை மட்டுமே. ஆனால் சென்னை-கன்னியாகுமரி இடையே போதிய அளவில் ரெயில் சேவை இல்லை. இது தென்மாவட்ட மக்களிடம் பெரும் குறையாக இருக்கிறது. எனவே 'வந்தே பாரத்' ரெயிலை சென்னை-கன்னியாகுமரி இடையே இயக்க வேண்டும். இதன்மூலம் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வணிகர்கள், தொழில் அதிபர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள். அதிலும் குறிப்பாக தென்மாவட்ட மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அனைத்தும் மாறும்

பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை அதிகாரிகள் கூறும் போது, 'நவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் பெயர் கொண்ட 16 பெட்டிகளுடன் ஒரு ரெயில் தயாரிக்க ரூ.110 கோடி செலவாகிறது. தொடர்ந்து தயாரிக்கும் போது, தயாரிப்புச் செலவுகள் இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்வதைவிட இந்தியாவில் தயாரித்தால் 40 சதவீதம் விலை குறைவாகும். வரும் காலங்களில் இந்தியாவில் ஓடும் அனைத்து ரெயில்களும் வந்தே பாரத் ரெயில்களாக மாற்றப்படும். குறிப்பாக பெருநகரங்களுக்கு இடையே ஓடும் சதாப்தி மற்றும் நீண்ட தூரம் செல்லும் ராஜ்தானி ஆகிய ரெயில்களும் வந்தே பாரத் ரெயில்களாக மாற்றும் திட்டமும் உள்ளது. தற்போது வந்தே பாரத் ரெயில்களில் இருக்கைகள் மட்டுமே இருக்கின்றன. வரும் காலங்களில் படுக்கை வசதியும் செய்து தரப்பட உள்ளது' என்று அதிகாரிகள் கூறினார்கள்.

12 வந்தே பாரத் ரெயில்கள்

வந்தே பாரத் ரெயிலின் முதல் பயணத்தை கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி டெல்லி- வாரணாசி இடையே பிரதமர் நரேந்திரமோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து டெல்லி-வாரணாசி, டெல்லி - காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணதேவி கட்ரா, மும்பை- குஜராத் காந்திநகர், டெல்லி - இமாசல பிரதேச மாநிலம் ஆம்ப் ஆண்டவுரா, சென்னை- மைசூரு, பிலாஸ்பூர்- நாக்பூர், ஹவுரா- டெல்லி, விசாகப்பட்டினம்- செகந்திராபாத், மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையம்- சோலாப்பூர், டெல்லி- ஜெய்பூர் என்று 11 நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் இயக்கப்படுகிறது.

கோவை - சென்னை இடையே 12-வது வந்தே பாரத் ரெயில் சேவையை வருகிற 8-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.


Next Story