வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருவிழா நிறைவு: வார விடுமுறையை முன்னிட்டு நாளை 600 சிறப்பு பஸ்கள் இயக்கம்


வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருவிழா நிறைவு: வார விடுமுறையை முன்னிட்டு நாளை 600 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

வார விடுமுறையை முன்னிட்டு நாளை 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருவிழா நிறைவையொட்டியும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சென்னை,

வருகிற 9-ந்தேதி (2-ம் சனிக்கிழமை), 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு 8-ந்தேதி (நாளை) வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பயணம் மேற்கொள்ள 10 ஆயிரத்து 545 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

600 சிறப்பு பஸ்கள்

இந்தநிலையில், பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 8-ந்தேதி (நாளை) தினசரி இயக்க கூடிய பஸ்களுடன் கூடுதலாக 300 சிறப்பு பஸ்களும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 600 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்காக இதுவரை 9 ஆயிரத்து 299 பயணி கள் முன்பதிவு செய்துள்ளனர்.

வேளாங்கண்ணி திருவிழா

மேலும், 8-ந்தேதி (நாளை) வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருவிழா முடிவடைவதை முன்னிட்டு வேளாங்கண்ணியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக அதாவது பெங்களூரு, சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story