உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்


உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
x

உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருச்சி

உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

காப்பு கட்டி விரதம்

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் பிரசித்திபெற்றது திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய பெருமைமிக்க வெக்காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அப்போது, வெக்காளியம்மனுக்கு பால்குடம் எடுக்கும் பக்தர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் திரளாக வந்து கோவிலில் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கினர். அன்று முதல் தினமும் மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

விழா நாட்களில் ஒவ்வொரு நாள் இரவு 7 மணிக்கு அம்மன் கேடயம், பூதவாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 11-ந்தேதி மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு யானை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 10 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து மதியம் 12.15 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. இதில் திருச்சி மட்டும் இன்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்தையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றிலிருந்து பால் குடங்கள் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இதே போல் 100-க்கும் மேற்பட்டோர் அக்னி சட்டிகளை ஏந்தியவாறு வெக்காளியம்மன் கோவிலை வலம் வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா

இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர் மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 10-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு காப்பு கலைதல் மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் லெட்சுமணன், துணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story