ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
x

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இருப்பினும் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

தர்மபுரி

பென்னாகரம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இருப்பினும் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

வெள்ளப்பெருக்கு

கர்நாடக மாநிலம் பெங்களூரு, கேரள மாநிலம் வயநாடு மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, நாட்றாம்பாளையம், கேரட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ெகாட்டியது. நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் மெயின் அருவிக்கு செல்லும் நுழைவுவாயில் பூட்டி வைக்கப்பட்டது. மேலும் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், ெமயின் அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

நீர்வரத்து குறைந்தது

இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நேற்று 4-வது நாளாக நீடித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.


Next Story