காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது


காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது
x

பெரியகுளம் அருகே காதலிக்க மறுத்ததால், இளம்பெண்ணை வீடு புகுந்து கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தேனி

பெரியகுளம் அருகே காதலிக்க மறுத்ததால், இளம்பெண்ணை வீடு புகுந்து கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையை அடுத்த அழகர்சாமிபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். இவர், அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துராஜ், தனது காதலை அந்த இளம்பெண்ணிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பெண், முத்துராஜின் காதலை ஏற்க மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ் இன்று இரவு இளம்பெண்ணின் வீட்டிற்கு கத்தியுடன் சென்றார். அப்போது அங்கு தகராறில் ஈடுபட்ட முத்துராஜ், அந்த இளம்பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில், அந்த இளம்பெண் மயங்கி விழுந்தார்.

வாலிபர் கைது

இதனை பார்த்த பெண்ணின பெற்றோர் அபயகுரல் எழுப்பினர். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, வாலிபரை மடக்கிப்பிடித்தனர். இதேபோல் கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பிடிபட்ட முத்துராஜ், பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துராஜை கைது செய்தனர். வீடுபுகுந்து இளம்பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் பெரியகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story