டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகை


டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 2 Nov 2022 7:30 PM GMT (Updated: 2 Nov 2022 7:30 PM GMT)

பாப்பிரெட்டிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட்டனர். அந்த கடையை வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:-

பாப்பிரெட்டிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட்டனர். அந்த கடையை வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

டாஸ்மாக் கடை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோளையானூர் பஸ் நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நேற்று பிற்பகல் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடை திறக்க விடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரபரப்பு

அப்போது, இந்த கடையால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த கடையை மூடக்கோரி ஏற்கனவே 2 முறை போராட்டம் நடத்தினோம். அப்போது கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வேறு இடத்துக்கு கடையை மாற்றும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று பெண்கள் கூறினர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story