விருத்தாசலம் அருகே வேலை வழங்கக்கோரிதேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
விருத்தாசலம் அருகே வேலை வழங்கக்கோரி தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த கச்சிராயநத்தம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலான மக்கள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் பாரத பிரதமர் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு வீட்டுக்கு கட்டணமாக ரூ.1350 கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் சிலர் தங்களுக்கு ஊதியம் வந்தவுடன் பணம் கொடுத்துவிடுவதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் குடிநீர் இணைப்பு வழங்கியதற்கான பணம் கொடுத்தால்தான் உங்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக தெரிகிறது.
போராட்டம்
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் அப்பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்துள்ளது. இந்த பணிக்காக அப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சென்றனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், குடிநீர் இணைப்புக்கான பணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் வேலை வழங்கியுள்ளனர். மற்றவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் விருத்தாசலம் ஆலடி சாலைபஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் மற்றும் ஆலடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொழிலாளர்கள் எங்களுக்கு சரியாக வேலை வழங்க வேண்டும் என கூறினர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதனை ஏற்று தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.