ஏற்காட்டில் கோடை விழா:5 லட்சம் பூக்களுடன் மலர் கண்காட்சி-இன்று தொடங்குகிறது


ஏற்காட்டில் கோடை விழா:5 லட்சம் பூக்களுடன் மலர் கண்காட்சி-இன்று தொடங்குகிறது
x

ஏற்காட்டில் கோடை விழா-மலர்கண்காட்சி இன்று தொடங்குகிறது. மலர் கண்காட்சியில் 5 லட்சம் பூக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

சேலம்

சேலம்:

ஏற்காட்டில் கோடை விழா-மலர்கண்காட்சி இன்று தொடங்குகிறது. மலர் கண்காட்சியில் 5 லட்சம் பூக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

கோடைவிழா

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி சிறப்பாக நடைபெறும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோடை விழா நடைபெறவில்லை.

இந்தநிலையில், இந்த ஆண்டு ஏற்காட்டில் 45-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி சிறப்பான முறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு ஏற்காடு கோடைவிழா தொடங்குவதாகவும், இதில், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

நேரம் மாற்றம்

ஆனால் தொடக்க விழா நிகழ்ச்சி நேரம் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது காலை 10 மணிக்கு பதிலாக இன்று மாலை 4 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்கள். பின்னர் அவர்கள் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகின்றனர்.

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், பொன்.கவுதமசிகாமணி, வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

5 லட்சம் மலர்கள்

கோடை விழா, மலர் கண்காட்சியில் குழந்தைகள், சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் 5 லட்சம் வண்ண, வண்ண மலர்களை கொண்டு மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், செய்தி-மக்கள் தொடர்பு துறையின் சார்பில் "ஓயா உழைப்பின் ஓராண்டு" சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

நாய்கள் கண்காட்சி

கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நாய்கள் கண்காட்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு-கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கலைப்பண்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சர்வதேச திரைப்படங்கள், இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், இளைஞர்களுக்கான கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கபடி, கயிறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 1-ந் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கோடை விழாவிற்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று சிறப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் கார்மேகம் கேட்டு கொண்டுள்ளார்.


Next Story