அதிமுக வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய வரக்கோரி பிரதமர் மோடிக்கு திமுக வேட்பாளர்கள் கிண்டல் பதிவு


அதிமுக வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய வரக்கோரி பிரதமர் மோடிக்கு திமுக வேட்பாளர்கள் கிண்டல் பதிவு
x
தினத்தந்தி 2 April 2021 12:24 PM GMT (Updated: 2 April 2021 12:24 PM GMT)

பிரதமர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் திமுக வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டும் கிண்டல் பதிவு வெளியிட்டு உள்ளனர்.

சென்னை

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற  தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

கோடை வெப்பத்தை விடவும், தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. ஒரு பக்கம் தலைவர்களின் தேர்தல் பிரசாரமும், மறுபக்கம் வருமான வரித்துறையின் சோதனைகளும் பரபரப்பைக் கூட்டி வருகின்றன.

பிரதமர் மோடி இன்று மதுரையில் பா.ஜ.க ,அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு  ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்

இந்த நிலையில், திமுக வேட்பாளர்கள் சிலர் தங்களது சுட்டுரைப் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு அழைப்பை முன்வைத்துள்ளனர். அதில், தயவு கூர்ந்து, எங்கள் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும், நான்தான், அந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்துப்போட்டியிடும் திமுக வேட்பாளர் என்றும், உங்கள் தேர்தல் பிரசாரம் மூலம் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இது பிரதமர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் திமுக  வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டும் கிண்டல் பதிவாகும்.

அன்புள்ள பிரதமர் நரேந்திரமோடி தயவுசெய்து திருச்செந்தூரில் பிரச்சாரம் செய்யுங்கள். நான் இங்கே திமுக வேட்பாளர், இது எனது வெற்றி விளிம்பை விரிவுபடுத்த உதவும். நன்றி ஐயா ”என்று திருச்செந்தூரைச் சேர்ந்த திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் டுவீட் செய்துள்ளார்.

ராணிப்பேட்டைச் சேர்ந்த எம்.எல்.ஏ மற்றும் திமுக வேட்பாளர் ஆர் காந்தி  அன்புள்ள பிரதமர் நரேந்திர தயவுசெய்து ராணிப்பேட்டில் பிரச்சாரம் செய்யுங்கள். நான் இங்கே திமுக வேட்பாளர், இது எனது வெற்றி விளிம்பை விரிவுபடுத்த உதவும். நன்றி ஐயா. என கூறி உள்ளார்.

அனைவரும் ஒரேமாதிரியாக டுவிட் செய்து உள்ளனர். இது போல் தாம்பரம் எம்.எல் ஏ  எஸ்.ஆர்.ராஜா, ஆண்டிபட்டி எம்.எல் ஏ. மகராஜா , தர்மபுரி எம். எல்.ஏ தடாகம் சுப்பிரமணி, எழும்பூர் தனித் தொகுதி திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமன்,  தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, பல்லாவரம் எம்எல்ஏவும் தற்போதைய வேட்பாளருமான இ. கருணாநிதி , வந்தவாசி வேட்பாளர் அம்பேத் குமார், 

திமுக வேட்பாளர்கள் எஸ்.எஸ். அன்பழகன், செல்வபெருந்தகை, ஒய். பிரகாஷ், சி.வி.எம்.பி. எழிலரசன், சிவகாமசுந்தரி,எ.வ. வேலு, ஆர். காந்தி, கயல்விழி செல்வராஜ்,  தங்கம் தென்னரசு, க. சுந்தர், ஆர். பாலு உள்ளிட்டோரும் தங்களது டுவிட்டரில் இதை குறிப்பிட்டு உள்ளனர்.



Next Story