இலங்கை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஐ.எஸ். அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள்


இலங்கை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஐ.எஸ். அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள்
x
தினத்தந்தி 22 May 2019 6:40 AM GMT (Updated: 22 May 2019 6:51 AM GMT)

இலங்கை குண்டு வெடிப்பில் ஐ.எஸ். அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள், வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.

கொழும்பு

இலங்கையில் கடந்த மாதம் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பை ஐ.எஸ். பயங்கரவாதிகள் இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு மூலம் நடத்தியதாக தகவல்  வெளியானது. இதுகுறித்து புலனாய்வு துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் இலங்கையிலேயே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் உதவியுடன் தயாரிக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள்  ஐ.எஸ். அமைப்பால் தயாரிக்கப்பட்ட "சாத்தானின் தாய்” எனப்படும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி உள்ளனர். இதனால் இந்த குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி  செய்துள்ளது.

பாரிசில் நடந்த 2015 தற்கொலை தாக்குதல், 2017-ல் இங்கிலாந்தில் மான்செஸ்டர் அரினா தாக்குதல், இந்தோனேசியாவில் ஒரு வருடத்திற்கு முன்பு தேவாலயங்களில் நடந்த தாக்குதல்களில் இந்த வகை வெடிகுண்டுகளே பயன்படுத்தப்பட்டு உள்ளது.

ஷாங்ரிலா ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த தற்கொலைப் படை பயங்கரவாதிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் ஒருவரது உடல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ‌ஷக்ரான் காசிம் என  கண்டறியப்பட்டுள்ளது. எனவே குண்டு வெடிப்பில் அவர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான ஷக்ரான் காசிம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளில் தெரிவித்ததாக  பலமுறை செய்திகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story