எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு நீட்டிப்பிற்கு எதிர்ப்பு: மேற்குவங்காள சட்டசபையில் தீர்மானம்


எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு நீட்டிப்பிற்கு எதிர்ப்பு: மேற்குவங்காள சட்டசபையில் தீர்மானம்
x
தினத்தந்தி 16 Nov 2021 12:37 PM GMT (Updated: 16 Nov 2021 12:37 PM GMT)

எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு நீட்டிப்பிற்கு எதிராக மேற்குவங்காள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

பாகிஸ்தான், வங்காளதேசம், மியான்மர், சீனா ஆகிய நாடுகளின் எல்லைகளில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்குவங்காளம், அசாம், மணிப்பூர், திரிபுரா, மிசோரம், நாகலாந்து, மிசோரம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் உள்ள எல்லைகளில் எல்லைப்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், எல்லையோரம் உள்ள மாநிலங்களின் குறிப்பட்ட தூரம் வரை மாநில அரசின் அனுமதியின்றி சோதனை நடத்தவும், சந்தேகிக்கும் நபர்களை கைது செய்யவும் எல்லைப்பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில், பஞ்சாப், மேற்குவங்காளம், அசாம் ஆகிய 3 மாநிலங்களில் எல்லையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிற்கு மாநில அரசின் அனுமதியின்றி எல்லைப்பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தவும், சந்தேகிக்கும் நபர்களை கைது செய்யவும் ஏற்கனவே அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. 

ஆனால், தற்போது எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, மேற்குவங்காளம், பஞ்சாப், அசாம் ஆகிய 3 மாநிலங்களிலும் எல்லைப்பகுதியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிற்கு எல்லைப்பாதுகாப்பு படையினர் தங்கள் அதிகார வரம்பை செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம் இம்மூன்று மாநிலங்களிலும் எல்லைப்பாதுகாப்பு படையினர் மாநில அரசின் அனுமதியின்றி எல்லையில் இருந்து 50 கிலோமீட்டர் வரை சோதனை நடத்தலாம் மேலும் சந்தேக நபர்களை கைது செய்யலாம். 

இந்நிலையில், எல்லைப்பாதுகாப்பு படையினரின் அதிகார வரம்பு நீட்டிபிற்கு மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்காள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எல்லைப்பாதுகாப்பு படையினரின் அதிகார வரம்பு 50 கிலோமீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்காள சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

Next Story