தமிழகத்தில் 34 அரசு கலை கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம் - அரசாணை வெளியீடு
தமிழகத்தில் 34 அரசு கலை கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்களை நியமித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வந்த இணை பேராசிரியர்களுக்கு, கல்லூரி முதல்வர்களாக (நிலை-2) பதவி உயர்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் டி.கார்த்திகேயன் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதன்படி வேலூர், அரியலூர், ஆலங்குளம், ஓசூர், கூடலூர், ராமேஸ்வரம், கடலூர், கோவை, மாதனூர், பர்கூர், மணல்மேடு, கொடைக்கானல், விருதுநகர், அவினாசி, விழுப்புரம் (வானூர்), கோவில்பட்டி, கரூர் (தரங்கம்பட்டி), சங்கரன்கோவில், பெரம்பலூர், சத்தியமங்கலம், காங்கேயம், குடவாசல், ஆண்டிப்பட்டி, பெரும்பாக்கம், குமாரபாளையம், பல்லடம், நாகப்பட்டினம், தேனி (கோட்டூர்), மேட்டுப்பாளையம், சீர்காழி, ஒரத்தநாடு, கடலாடி, வால்பாறை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் உள்ள 34 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இது தவிர, வட சென்னையில் உள்ள போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையம், சென்னையில் உள்ள அகில இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பயிற்சி மையம், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்வி மேம்பாட்டு படிப்பு நிறுவனத்துக்கும் முதல்வர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story