குடியேற்ற சட்டத்தில் மாற்றம் அமெரிக்க அதிபர் உத்தரவு மிகுந்த மன வேதனை அளிக்கிறது மலாலா யூசுப்


குடியேற்ற சட்டத்தில் மாற்றம்  அமெரிக்க அதிபர் உத்தரவு மிகுந்த மன வேதனை அளிக்கிறது மலாலா யூசுப்
x
தினத்தந்தி 28 Jan 2017 6:33 AM GMT (Updated: 28 Jan 2017 6:33 AM GMT)

அமெரிக்காவில் வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் குடியேற்ற சட்டத்தில் மாற்றங்களை செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார் இது தனக்கு மன வேதனை அளிக்கிறது என மலாலா யூசுப் கூறி உள்ளார்

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் குடியேற்ற சட்டத்தில் மாற்றங்களை செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை டொனால்டு டிரம்ப் நடைமுறைப்படுத்தி வருகிறார். மெக்சிகோ நாட்டினரின் ஊடுருவலை தடுக்க எல்லையில் சுவர் கட்டப்படும் என கூறியிருந்தார்.

அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் குடியேற்றத்தை தடுக்க கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்களை விதித்து உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி சிரியா நாட்டினருக்கு விசா வழங்குவது நிறுத்தப்படுகிறது. மேலும் சிரியா அகதிகளுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. இவை அமெரிக்காவில் தீவிரவாதிகள் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தும் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவில் தங்குவதற்கு 4 மாதங்கள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அகதிகள் குறித்த விவரங்கள் முழுவதையும் விவரமாக தெரிந்து கொண்டு அதன்பின்பு அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அகதிகள் அமெரிக்காவில் தங்குவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த நிதியாண்டில் 50 ஆயிரம் அகதிகள் தங்க அமெரிக்க அரசு திட்டமிட்டிருந்தது. கடந்த அண்டு 84,995 அகதிகள் அமெரிக்காவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12,587 பேர் சிரியாவை சேர்ந்தவர்கள்.

ஒபாமா அரசு இந்த ஆண்டு 1 லட்சத்து 10 ஆயிரம் அகதிகள் தங்க இலக்கு நிர்ணயித்து இருந்தது. தற்போது டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவில் முஸ்லிம் நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு அதில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. அவர்கள் அகதிகளாக குடியேற விண்ணப்பிக்கலாம்.

மேலும் தீவிரவாதத்துடன் தொடர்புடைய ஈராக், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக் காவில் குடியேறுவதற்கு விண்ணப்பிக்க 90 நாட்கள் ‘சஸ்பெண்டு’ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நாடுகளில் இருந்து குடியேற விரும்புகிறவர்கள் குறித்த தகவல்களை அமெரிக்காவின் உள்நாடு மற்றும் வெளிநாடு துறை அதிகாரிகள், தேசிய உளவுத்துறையினருடன் இணைந்து தீர விசாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

அகதிகள் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் உத்தரவு தமக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதாக, பாகிஸ்தானின் சமூக ஆர்வலரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான  மலாலா யூசுப் தெரிவித்துள்ளார்

உலகில் பாதுகாப்பற்ற அகதிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் கைவிட்டுவிடக்கூடாது என்ற வேண்டுகோளையும் அவர் முன் வைத்தார்.

Next Story