தைவான் நாடாளுமன்ற பிரதிநிதிகள் இந்தியா வருகை: சீனா கடும் எதிர்ப்பு
தைவான் நாடாளுமன்ற பிரநிதிகள் இந்தியா வருகை தந்ததற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்,
தைவான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய வருகை தந்ததற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் கூறியிருப்பதாவது:- தைவான் விவகாரத்தில் சீனாவுக்கு சவால் அளிப்பதன் மூலம் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது, இதனால் இந்தியா கடும் இழப்புகளை சந்திக்க நேரிடும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தைவான் விவகாரத்தில் சீனாவுக்கு சவால் அளிப்பதிலிருந்து பின்வாங்கியுள்ள நிலையிலும், ஒரே சீனா கொள்கையை அமெரிக்கா ஆதரிக்கும் நிலையிலும், இந்தியா எங்களைத் தூண்டும் விதமாக நடந்து கொள்கிறது. இந்தியா-தைவான் இடையே உயர்மட்ட வருகைகள் அடிக்கடி நிகழ்வதல்ல. இப்படியிருக்கும் போது தைவான் மகளிர் நாடாளுமன்ற குழுவை இந்த நேரத்தில் இந்தியா வரவேற்றது ஏன்?
தைவான், தென்சீன கடல் விவகாரம், தலாய் லாமா என்று சீனாவுடன் பேரம் பேச இந்த விவகாரங்களை வேண்டுமென்றே கையிலெடுத்து வருகிறது இந்தியா.சீனா-பாகிஸ்தான் பொருளாதார ஒப்பந்தங்களுக்குப் பிறகே சீனாவின் மீதான இந்தியாவின் சந்தேகம் அதிகரித்து வருகிறது. சீனாதான் இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளி. இந்தியாவின் இத்தகைய நடவடிக்கைகளினால் இந்த கூட்டுறவு கடினமாகும் சூழலை இந்தியா ஏற்படுத்தியுள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story