அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார் வடகொரியா மிரட்டல்


அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார் வடகொரியா மிரட்டல்
x
தினத்தந்தி 23 April 2017 9:24 AM GMT (Updated: 23 April 2017 9:23 AM GMT)

அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார் என வடகொரியா மிரட்டல் விடுத்து உள்ளது.

சியோல், 


ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி வடகொரியா 5 முறை அணு ஆயுதங்களை சோதித்துள்ளது. தொடர்ந்து ஏவுகணை சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த 15-ம் தேதி அந்த நாட்டின் நிறுவனர் கிம் இல் சுங்கின் 105-வது பிறந்த தினத்தையட்டி பியாங்யாங் நகரில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. வடகொரியாவின் படை பலத்தை காட்டுகிற வகையில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவி ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று எதிரிகளின் இலக்குகளை தாக்கும் வல்லமைமிக்க ஏவுகணைகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், வடகொரியா மறுநாள் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. பல்வேறு முறை எச்சரிக்கை விடுத்தும் வடகொரியா அதனை கண்டு கொள்வது கிடையாது.  

இதனையடுத்து வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்தும் வகையில் அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து அங்கு போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. இந்த அணி அடுத்த சில நாட்களில் கொரிய தீபகற்பத்துக்கு போய்ச்சேரும் என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் கூட்டு போர் பயிற்சிக்காக ஜப்பானின் 2 போர்க்கப்பல்கள் வந்து சேர்ந்துள்ளன. இருப்பினும் வடகொரியா அடங்குவதாக இல்லை.

அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார் என வடகொரியா மிரட்டல் விடுத்து உள்ளது.

அந்த நாட்டின் ஆளும் தொழிலாளர் கட்சியின் செய்தித்தாள் ரோடாங் சின்மன், நமது புரட்சிகர படைகள் அணுசக்தியால் இயங்கக்கூடிய அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார் என்று கூறி அமெரிக்காவை மிரட்டி உள்ளது.
இப்படி செய்வது, தனது படை பலத்தை வெளிக்காட்டுவதற்கு ஆதாரமாக அமையும் என்றும் அது தெரிவித்துள்ளது. இதற்கிடையே கிம் என்ற புனைப்பெயரால் அறியப்படுகிற கொரிய வம்சாவளி அமெரிக்கரை வடகொரியா கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கைது செய்யப்பட்டிருப்பவர் யான்பியன் அறிவியல், தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கிம் கைது உறுதி செய்யப்பட்டால் வடகொரியாவில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்கர்களின் எண்ணிக்கை 3 ஆக உயரும். கைது செய்யப்பட்ட ஒரு அமெரிக்கர் உளவு பார்த்ததாக தண்டனை பெற்று உள்ளார், மற்றொருவர் திருடியதாக கைது செய்யப்பட்டு உள்ளார். 

Next Story