அதிபர் எதிர்ப்பு போராட்டத்தில் தாக்குதல் வெனிசூலாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் படுகாயம்


அதிபர் எதிர்ப்பு போராட்டத்தில் தாக்குதல் வெனிசூலாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 30 May 2017 10:45 PM GMT (Updated: 30 May 2017 7:39 PM GMT)

வெனிசூலா நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் தங்கள் அன்றாட சாப்பாட்டுக்கே வழியற்ற நிலையில் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கராக்கஸ்,

இதன் காரணமாக அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. அங்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் கடந்த 2 மாதங்களாக சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி, போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் அங்கு தலைநகர் கராக்கஸ்சில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித்தலைவர்களை பாதுகாப்பு படையினர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்த தாக்குதலில் முக்கிய தலைவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி 2 முறை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட மூத்த தலைவர் ஹென்ரிக் கேப்ரிலஸ் கூறும்போது, “நாங்கள் தாக்கப்பட்டோம். இந்த அரசாங்கத்துக்கு உயிர்களைக் கொல்கிற ஆற்றலும், எதையாவது எரிக்கிற சக்தியும் மட்டுமே உள்ளது. நாங்கள் நடத்திய போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தாக்குதலில் பலரும் காயம் அடைந்துள்ளோம். இதுபற்றி அரசு வக்கீல்களிடம் முறையிடுவோம்” என கூறினார்.

ஹென்ரிக் கேப்ரிலஸ் காயம் அடைந்துள்ள படத்தை டாக்டரும், எம்.பி.யுமான ஜோஸ் ஆலிவரேஸ் என்பவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Next Story