ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் 23 பேர் கொன்று குவிப்பு


ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் 23 பேர் கொன்று குவிப்பு
x
தினத்தந்தி 24 Feb 2018 10:45 PM GMT (Updated: 24 Feb 2018 6:38 PM GMT)

ஆப்கானிஸ்தானில் நடந்த 2 பயங்கரவாத தாக்குதல்களில் 23 பேர் பலியாகினர்.

காபூல்,

அமெரிக்காவில் 2001–ம் ஆண்டு செப்டம்பர் 11–ந் தேதி வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி கடும் தாக்குதலை நடத்தினார்கள்.

இதில் 3 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். பெருமளவில் சொத்துக்களும் நாசமாயின.

இந்த தாக்குதல்களை தொடர்ந்து அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்களை அமெரிக்க படையினர் விரட்டியடித்தனர். மக்கள் ஆட்சி மலரச்செய்தனர்.

அங்கு அமெரிக்க கூட்டுப்படைகள் தொடர்ந்து தங்கி இருந்து, பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவதில் உள்நாட்டு படைகளுக்கு பக்க பலமாக உள்ளன.

தலீபான்களுக்கு எதிராக அங்கு தொடர்ந்து 18 ஆண்டுகளாக சண்டை நடந்து வந்தாலும், அவர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

கடந்த ஜனவரி மாதம் மத்தியில் இருந்து தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தலைநகர் காபூலில் சொகுசு ஓட்டல் ஒன்றில் நடத்திய தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

இந்த நிலையில் பராஹ் மாகாணத்தின் பாலாபுளுக் மாவட்டத்தில் ஆப்கானிஸ்தான் ராணுவ தளம் இயங்கி வந்தது. நேற்று முன்தினம் இரவு அந்த ராணுவ தளத்துக்குள் தலீபான் பயங்கரவாதிகள் கூட்டமாக நுழைந்தனர். அங்கு அவர்கள் நடத்திய தாக்குதல்களில் ராணுவ வீரர்கள் 18 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘ வெள்ளிக்கிழமை இரவு பெரிய கும்பலாக வந்த தலீபான் பயங்கரவாதிகள் பாலாபுளுக் ராணுவ தளத்தில் நடத்திய தாக்குதல்களில் 18 ராணுவ வீரர்களை இழந்து விட்டோம். அங்கு படைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன’’ என்று குறிப்பிட்டார்.

இந்த தாக்குதல்களுக்கு உடனடியாக தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்று விட்டதாக மாகாண துணை கவர்னர் யூனூஸ் ரசூலி தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு உண்மை கண்டறியும் குழு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதல்களின் சுவடு மறைவதற்கு முன்பாக தலைநகர் காபூலில் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் நேற்று காலை தனது உடலில் கட்டி எடுத்து வந்திருந்த குண்டுகளை வெடிக்க வைத்தார்.

இந்த தாக்குதல், நேட்டோ படைகளின் அலுவலகம் அமைந்து உள்ள பகுதியில் நடந்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலின்போது அந்தப் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த ஒருவர், உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘பலத்த சத்தத்துடன் கூடிய குண்டுவெடிப்பு நடந்தது. இதில் எனது காரின் கண்ணாடிகள் தூள் தூளாயின. இந்த தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்ததை நான் பார்த்தேன்’’ என கூறினார்.

தலைநகர் காபூலுக்கு என புதிய பாதுகாப்பு திட்டத்துக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அ‌ஷரப் கனி ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story