கனடாவில் காரை நிறுத்துவதில் தகராறு இந்தியர் மீது இனவெறி தாக்குதல்


கனடாவில் காரை நிறுத்துவதில் தகராறு இந்தியர் மீது இனவெறி தாக்குதல்
x
தினத்தந்தி 22 Aug 2018 11:45 PM GMT (Updated: 22 Aug 2018 7:31 PM GMT)

இந்தியாவில் இருந்து 7 ஆண்டுகளுக்கு முன்பாக கனடா சென்று குடியேறியவர், ராகுல்குமார். அங்கு மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றிக்கொண்டு, எட்மண்டன் என்ற இடத்தில் வசித்து வருகிறார்.

டொராண்டோ,

ஏஞ்சலிக் என்ற வெள்ளைக்காரப் பெண், ராகுல் குமார் வீட்டு வளாகத்தில் உள்ள தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்கு காரில் சென்றார். அப்போது காரை எங்கு நிறுத்துவது என்பதில், அவருக்கும், ராகுல் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அந்த வெள்ளைக்காரப்பெண் நிதானம் இழந்து இனவெறி பிடித்தவராக ராகுல் குமாரை கண்டபடி திட்டினார். உடனே அதை ராகுல்குமார் செல்போனில் படம் பிடித்தார். அது அந்தப் பெண்ணுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

ராகுல் குமாரை நோக்கி, ‘‘நீ எப்படி வேண்டுமானாலும் படம் பிடித்துக்கொள் பக்கி... பக்கி, நீ உன் நாட்டுக்கு போய் விடு’’ என்று கூறினார். கடைசியில் ராகுல் குமார் கார் மீது அந்தப் பெண் எச்சிலை உமிழ்ந்தார்.

இந்த இனவெறி தாக்குதல், அங்கு சி.டி.வி. செய்தி இணையதளத்தில் செய்தியாக வெளிவந்தது. வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் ராகுல் குமார், ‘‘இது போன்று எனக்கு ஒருபோதும் ஏற்பட்டது இல்லை. அந்தப்பெண் பேசிய வார்த்தைகளால் நான் அதிர்ந்து போய் விட்டேன்’’ என்று கூறி உள்ளார்.

ஆனால் அந்தப் பெண்ணோ, தான் அப்படி நடந்து கொண்டதற்காக மனம் வருந்தவும் இல்லை. ராகுல் குமாரிடம் வருத்தம் தெரிவிக்கவும் தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் கனடா வாழ் இந்தியர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story