பிரதமர் இல்லத்தினை தவிர்க்கும் இம்ரான் கான் முடிவால் அரசுக்கு ரூ.185 கோடி சேமிப்பு
பிரதமர் இம்ரான் கான் அலுவலக இல்லத்தில் தங்காமல் அரசுக்கு ரூ.185 கோடி சேமிக்க முடிவு செய்துள்ளார்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் ஆனவர் இம்ரான் கான்.
அரசை நடத்த பாகிஸ்தானில் போதிய நிதி இல்லை என அவர் நேற்று கூறினார். இந்த நிலையில், தனக்காக ஒதுக்கப்பட்ட அலுவலக இல்லத்தில் தங்காமல் ரூ.185 கோடி அரசு நிதியை சேமிக்க முடிவு செய்துள்ளார்.
இதனால் பொது மக்களின் வரி பணம் ஆடம்பரத்திற்காகவும் மற்றும் அரசு விதிகளுக்காகவும் பிரதமரால் வீணாக்கப்படவில்லை என்ற நற்செய்தி மக்களுக்கு கொண்டு செல்லப்படும்.
பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் இல்லத்தில் தங்கவோ அல்லது வி.வி.ஐ.பி. அந்தஸ்தினை அனுபவிப்பதோ இல்லை என பல முறை பேட்டி மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் இம்ரான் கான் தெளிவுப்பட கூறியுள்ளார்.
இதேபோன்று தனது கட்சியின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட மந்திரிகள் மற்றும் மாகாண முதல் மந்திரிகளும் எளிமைக்கான விதிகளை பின்பற்றுவார்கள் என உறுதி அளித்துள்ளார்.
பிரதமர் இல்ல வளாக செலவுகளுக்காக ஆண்டுதோறும் ₹.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதேபோன்று பிரதமர் இல்ல ஊழியர்களுக்காக ₹.70 கோடி செலவிடப்படும்.
உயரதிகாரிகள் மற்றும் விருந்தினர்களின் வருகைக்காக அவர்களுக்கு அளிக்கும் பரிசுகளுக்கு ₹.15 கோடியும் மற்றும் புதுப்பித்தல் மற்றும் அலங்கரித்தல் பணிகளுக்காக ₹.1.5 கோடியும் செலவிடப்படும்.
இதுபோன்ற செலவுகளை குறைப்பதற்கான இம்ரான் கானின் இந்த வாக்குறுதி அவரது மதிப்பினை பாகிஸ்தான் மட்டுமின்றி உலகம் முழுவதும் நிச்சயம் உயர்த்தும்.