சோமாலியா: உளவாளிகள் 5 பேர் கொன்று குவிப்பு - அல் சபாப் பயங்கரவாதிகள் அட்டூழியம்


சோமாலியா: உளவாளிகள் 5 பேர் கொன்று குவிப்பு - அல் சபாப் பயங்கரவாதிகள் அட்டூழியம்
x
தினத்தந்தி 10 Oct 2018 11:15 PM GMT (Updated: 10 Oct 2018 7:12 PM GMT)

சோமாலியாவில் உளவாளிகள் 5 பேர் அல் சபாப் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

மொகாதிசு,

சோமாலியா நாட்டில் ஒரு மதத்தின் அடிப்படையிலான அரசை அமைப்பதற்காக அல் சபாப் பயங்கரவாதிகள் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். இந்த இயக்கத்தினர், அல்கொய்தா பயங்கரவாதிகளுடன் நெருக்கமானவர்கள்.

தங்கள் இயக்கத்துக்கு எதிராக செயல்படுகிற யாரையும் அவர்கள் உயிரோடு விட்டு வைக்க மாட்டார்கள். கடந்த டிசம்பர் மாதம்கூட, ஒரு வாலிபர் உள்பட 5 பேரை உளவாளிகள் என்று கூறி அல் சபாப் பயங்கரவாதிகள் கொன்று விட்டனர்.

இந்த நிலையில், இப்போதும் தங்களுக்கு எதிரான உளவாளிகள் என்று 5 பேரை அவர்கள் அடையாளம் கண்டனர். அவர்களை பிடித்தனர். அவர்களில் ஒருவர் இங்கிலாந்தை சேர்ந்தவர். 3 பேர் அமெரிக்க உளவாளிகள் என்பது அல் சபாப் பயங்கரவாதிகளின் குற்றச்சாட்டு.

அவர்கள் 5 பேரையும் பொது இடத்தில் நிற்க வைத்து அல் சபாப் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்று விட்டனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சோமாலியா அரசு ஊழியர் என கூறப்படுகிறது.

இந்தப் படுகொலை தொடர்பாக இங்கிலாந்து, அமெரிக்கா, சோமாலியா அரசுகள் எதுவும் கருத்து கூறவில்லை. இந்த சம்பவம், சோமாலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story