வெளிநாட்டுக்கு சென்று படியுங்கள், பணிபுரியுங்கள்; சொந்த நாட்டை மறவாதீர்: வெங்கையா நாயுடு


வெளிநாட்டுக்கு சென்று படியுங்கள், பணிபுரியுங்கள்; சொந்த நாட்டை மறவாதீர்:  வெங்கையா நாயுடு
x
தினத்தந்தி 3 Nov 2018 11:09 AM GMT (Updated: 3 Nov 2018 11:09 AM GMT)

வெளிநாட்டுக்கு சென்று படியுங்கள், பணிபுரியுங்கள். ஆனால் சொந்த நாட்டை மறந்து விடாதீர்கள் என ஜிம்பாப்வே சென்ற வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

ஹராரே,

இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதில் தனது சுற்று பயணத்தின் 2வது பகுதியாக ஏர் இந்தியா விமானத்தில் ஜிம்பாப்வே நாட்டுக்கு அவர் புறப்பட்டு சென்றார்.

அவரை ராபர்ட் கேப்ரியேல் முகாபே சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு அந்நாட்டு துணை ஜனாதிபதி கெம்போ மொஹதி, வெளிவிவகார துறை மந்திரி (பொறுப்பு) கெயின் மதீமா மற்றும் ஜிம்பாப்வேக்கான இந்திய தூதர் ரங்சங் மசாகுய் ஆகியோர் வரவேற்றனர்.

அதன்பின்னர் அவருக்கு ஜிம்பாப்வேயில் உள்ள இந்திய சமூகத்தினர் வரவேற்பு அளித்தனர்.  அவர்கள் முன் பேசிய நாயுடு, இந்தியா வேகமுடன் வளர்ந்து வருகிறது.  உலகின் மிக பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்.  நம் நாடு சீர்திருத்தங்களை மேற்கொள்ள தொடங்கி உள்ளது. அவை வலியை தருமென்றாலும் இறுதியில் கனிகளை தரும்.

ஒவ்வொருவரும் தங்களது தாய், தந்தை, கலாசாரம், மொழி மற்றும் மரபுகளை நினைவுகூர வேண்டும்.  நீங்கள் வெளிநாட்டிற்கு சென்று, பணிபுரியலாம், படிக்கலாம்.  ஆனால் நீங்கள் பிறந்த உங்களது சொந்த நாட்டை மறக்க கூடாது.  மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என கூறியுள்ளார்.

இதேபோன்று இந்தியர்கள் வெளிநாட்டில் வசிக்கும்பொழுது, அந்நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story