சிங்கப்பூரில் கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய இந்தியருக்கு சிறை


சிங்கப்பூரில் கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய இந்தியருக்கு சிறை
x
தினத்தந்தி 12 Dec 2018 11:15 PM GMT (Updated: 12 Dec 2018 7:38 PM GMT)

சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஜெயசீலன் சந்திரசேகர். இவருடைய மனைவி மயூரி கிருஷ்ணகுமார். இவர்களுக்கு கடந்த 2013–ம் ஆண்டு திருமணம் நடந்தது. 3 வயதில் குழந்தை உள்ளது. இதற்கிடையில் மயூரி 2–வது முறையாக கர்ப்பமானார்.

சிங்கப்பூர், 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி தனக்கு துரோகம் செய்து விட்டதாவும், முதல் குழந்தை தனக்கு பிறக்கவில்லை எனவும் கூறி மயூரியிடம் ஜெயசீலன் தினந்தோறும் தகராறு செய்து வந்தார்.

ஒரு கட்டத்துக்கு மேல் கணவரின் கொடுமைகளை சகித்துக்கொள்ள முடியாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 24–ந்தேதி, மயூரி வீட்டை விட்டு ஓடினார். பின்னர் அவர் விபசார அழகிகளாக இருக்கும் தனது முன்னாள் தோழிகளிடம் அடைக்கலம் புகுந்தார்.

டிசம்பர் 30–ந்தேதி, மயூரி காலை உணவு வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றார். அங்கு தனது ஆண் நண்பரான நந்தா என்பவரை பார்த்து அவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த ஜெயசீலன் தனது மனைவி விபசார அழகியாக மாறிவிட்டதாகவும், அவருடன் பேசிக் கொண்டிருக்கும் நபர் தரகர் எனவும் நினைத்துக் கொண்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மனைவியை சரமாரியாக தாக்கியதோடு, கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் அவரது வயிற்றில் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக வயிற்றில் இருந்த குழந்தைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயசீலனை கைது செய்தனர்.

இந்த வழக்கு சுமார் 1 ஆண்டு காலமாக சிங்கப்பூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் ஜெயசீலன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் மனைவியை கத்தியால் குத்திய ஜெயசீலனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.


Next Story