சூரியனின் வளிமண்டலத்தை மிக அருகில் படம் பிடித்த சோலார் புரோப்


சூரியனின் வளிமண்டலத்தை மிக அருகில் படம் பிடித்த  சோலார் புரோப்
x
தினத்தந்தி 18 Dec 2018 9:49 AM GMT (Updated: 18 Dec 2018 9:49 AM GMT)

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பிய 'பார்கர் சோலார் புரோப்' சூரியனின் வளிமண்டலத்தை மிக அருகில் படம் எடுத்து உள்ளது.

முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்ய 'பார்கர் சோலார் புரோப்' என்ற விண்கலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பப்பட்டது .

சூரியனின் வளிமண்டல மேலடுக்கான கொரோனாவை ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. சூரியனை பற்றி இதுவரை அறியப்படாத தகவல்களை இந்த விண்கலம் வழங்கும் என்று நாசா கூறி இருந்தது.  இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் அண்மையாக சூரியனை படம் பிடித்துள்ளது சோலார் புரோப் .

மனிதர்களால் உருவாக்கப்பட்ட பொருள் ஒன்று சூரியனுக்கு மிக அண்மையாக சென்றது இதுவே முதன்முறை ஆகும். இந்த மாதம் 11-ம் தேதி இப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சூரியனிலிருந்து சுமார் 27.2 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்தே எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படமானது இந்த தூரத்தினை விடவும் குறைவானது என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இப்பகுதியில் வெப்பநிலையானது 2,500 டிகிரி செல்சியஸ் ஆக இருந்துள்ளது. மீண்டும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி சூரியனுக்கு அண்மையாக சென்று படம் பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story