வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை


வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய்  இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Feb 2019 4:02 AM GMT (Updated: 14 Feb 2019 7:36 AM GMT)

வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாஷிங்டன்,

தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இங்கு அதிபராக இருந்த ஹக்கோ சாவேஸ் கடந்த 2013-ம் ஆண்டு மரணமடைந்த பின்னர் அதிபராக நிகோலஸ் மதுரோ பதவி ஏற்றார். அப்போதே அவரின் மீது விமர்சனங்கள் எழுந்தன.

 கடந்த மே மாதம் நடந்த நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன. வெனிசுலா கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், அரசியல் நிலையற்ற தன்மையாலும் திண்டாடி வருகிறது. மதுரோவின் ஆட்சிக்கு எதிரான மக்கள் தொடர்ந்து வீதிகளில் போராடி வருகின்றனர்.

இதற்கு மத்தியில், எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோ தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டார். இதற்கு அமெரிக்காவும், தென் அமெரிக்க நாடுகள் சிலவும் அங்கீகாரம் அளித்தன. வெனிசுலாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நடவடிக்கையால், கடும் அதிருப்தியடைந்த அதிபர் நிகோலஸ் மடூரோ, அமெரிக்காவிலிருந்து வெளியேறுமாறு தங்கள் நாட்டுத் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, வெனிசுலாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பெட்ரோலியோஸ் டி வெனிசுலா (பிடிவிஎஸ்ஏ) மீது கடந்த ஜனவரி 29-ஆம் தேதி அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.

இந்நிலையில், இந்தியாவுக்கு வருகை தந்த வெனிசுலா கச்சா எண்ணெய் மந்திரி, மேனுவல் குவாவிடோ செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், இந்தியாவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே மிகச் சிறந்த நல்லுறவு விளங்குகிறது. அந்த நல்லுறவைத் தொடரவே நாங்கள் விரும்புகிறோம். கச்சா எண்ணெய் ஏற்றுமதி உள்ளிட்ட இந்தியாவுடனான வணிக உறவு மேலும் மேம்படுத்தப்படும் என்றார்.  இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. 

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இது பற்றி கூறும் போது,  வெனிசுலா நாட்டு மக்களுக்குச் சொந்தமான வளங்களைப் பாதுகாக்க அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மற்ற நாடுகளும் அதற்கு உதவ வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். அமெரிக்காவுடனும், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுடனும் இந்தியா சிறந்த நல்லுறவைக் கொண்டுள்ளது. அதே வேளையில், வெனிசுலாவின் வளங்களைத் திருடி வரும் அதிபர் மதுரோவுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்கக் கூடாது”என தெரிவித்து உள்ளார். 


Next Story