சீனாவில் உள்ள ரசாயன ஆலையில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு


சீனாவில் உள்ள  ரசாயன ஆலையில் வெடி விபத்து:  பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு
x
தினத்தந்தி 22 March 2019 4:19 AM GMT (Updated: 22 March 2019 7:04 AM GMT)

சீனாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

பெய்ஜிங்,

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ளது ஜியாங்க்சூ மாகாணம். இந்த மாகாணத்தில் உள்ள யான்செங் என்ற நகரில் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், நேற்று உள்ளூர் நேரம் பிற்பகல் 2.50 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. 

உரப்பொருட்கள் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து அந்த இடத்தில் தீ பற்றி எரிந்தது. இதில் சிக்கிய தொழிலாளர்கள் 44 பேர் பலியாகினர்.  மேலும், 32 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், 58 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

 தொழிற்சாலையில் இருந்து 88 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரசாயன ஆலையில் ஏற்பட்ட இந்த பெரும் வெடிவிபத்தால் அந்த நேரத்தில் அப்பகுதியில் 2.2 அளவுக்கு சமமான ஒரு நில அதிர்வு இருந்ததாக சீனாவின் பூகம்பம் கண்காணிப்பு தொடர்பான நிர்வாக குழு தெரிவித்துள்ளது. 

இந்த வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள படங்களில், தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு தீப்பிழம்பு எழுவதையும், அருகாமையில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்துள்ள காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால், வெளியாகியுள்ள நச்சுக்கசிவால், அருகாமையில் உள்ள மக்கள் உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வேதியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story