பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம் செய்த இந்திய பெண்ணின் கதை திரைப்படமாகிறது


பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம் செய்த இந்திய பெண்ணின் கதை திரைப்படமாகிறது
x
தினத்தந்தி 12 April 2019 5:12 AM GMT (Updated: 12 April 2019 5:12 AM GMT)

பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த இளம்பெண் பிரச்சினைகளில் இருந்து மீண்டு தன்னுடைய வாழ்க்கையை புதிதாக தொடங்கியுள்ளார்.

இந்திய பெண்ணான உஸ்மா பாகிஸ்தானை சேர்ந்த தஹிர் அலி என்பவரை இரண்டாண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் சந்தித்தார். இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கிய நிலையில் பாகிஸ்தான் சென்ற தஹிரை காண உஸ்மா அங்கு சென்றார்.அப்போது தஹிருக்கு ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் இருப்பதை கண்டுப்பிடித்த உஸ்மா அதிர்ச்சியடைந்தார்.

இதன்பின்னர் துப்பாக்கி முனையில் தஹிரை திருமணம் செய்து கொள்ள உஸ்மா வற்புறுத்தப்பட்ட நிலையில் திருமணமும் நடந்தது. இதன் பின்னர் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை உஸ்மா அனுபவித்த நிலையில் இந்திய ஹைகமிஷன்  உதவியை அவர் நாடினார்.

இதையடுத்து 2017 மே மாதம் 25ஆம் தேதி இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார் உஸ்மா. இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி நிகழ்வுகளிலிருந்து மீள 2 ஆண்டுகள் ஆனதாக கூறும் உஸ்மா தற்போது புதிதாக தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார். அதன்படி, தற்போது டெல்லியில் அழகு நிலையம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். 

இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அதிலிருந்து மீண்டுவந்து இந்தியாவில் புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தம்மைப் போன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும், இதற்காக அமைப்பு ஒன்றை ஏற்படுத்தியிருப்பதாகவும் உஸ்மா தெரிவித்தார்.

உஸ்மாவின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் ஒன்றும் தயாராகி வருகிறது.

Next Story