காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு


காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு
x
தினத்தந்தி 20 Aug 2019 2:18 PM GMT (Updated: 20 Aug 2019 2:18 PM GMT)

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது என பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், அந்த  மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த விவகாரத்தில் இந்திய அரசை பாகிஸ்தான் கடுமையாக விமர்சனம்  செய்கிறது. இருநாடுகள் இடையிலான தூதரக உறவு, ரெயில் சேவை, பேருந்து சேவை, வர்த்தக உறவை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்,  இந்தியாவில் பிரதமர் மோடி  தலைமையிலான அரசு, சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது. அவரது அரசின் செயல்பாடுகள், பாகிஸ்தானுக்கும், இந்தியாவில் வாழும்  சிறுபான்மையினருக்கும் அச்சுறுத்தலாக உள்ளன. இந்தியாவிடமுள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை, சர்வதேச நாடுகள் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலையிடுவதற்காக பாகிஸ்தான் சீனா மூலமாக மேற்கொண்ட முயற்சியும் வெற்றியடையவில்லை.  

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என உலக நாடுகளும், ஐ.நா.வும் கூறிவிட்டது. இந்திய அரசு இனி பேச்சுவார்த்தையென்றால் அது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமாகதான் இருக்கும் எனக் கூறிவிட்டது. இதற்கிடையே பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக செல்ல முடியாது என்பதில் இந்தியா ஸ்திரமாக உள்ளது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது என பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி, “காஷ்மீர்  விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளோம்,” எனக் கூறியுள்ளார் என பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ARY News TV செய்தி வெளியிட்டுள்ளது.

அனைத்து சட்ட காரணிகளையும் ஆய்வு செய்துதான் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story