ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் 5 பேர் பலி; 50 பேர் காயம்


ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் 5 பேர் பலி; 50 பேர் காயம்
x
தினத்தந்தி 3 Sep 2019 1:28 AM GMT (Updated: 3 Sep 2019 1:28 AM GMT)

ஆப்கானிஸ்தானில் தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க சிறப்பு தூதர் வருகை தந்த நிலையில் தாக்குதலில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க சிறப்பு தூதர் ஜல்மே கலீல்ஜாத் அந்நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.  அவரிடம் தோலோ நியூஸ் என்ற அந்நாட்டின் தொலைக்காட்சி நிலையம் பேட்டி எடுத்து கொண்டிருந்தது.

ஆப்கானிஸ்தானில் பல வருடங்களாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மற்றும் அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதற்காக இந்த பேச்சுவார்த்தை பல சுற்றுகளாக நடந்து வருகிறது.  எனினும், இதுவரை முடிவு எட்டப்படவில்லை.

இதனிடையே, கிரீன் வில்லேஜ் என்ற பகுதியருகே குடியிருப்பு பகுதியை இலக்காக கொண்டு வெடிகுண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.  கிரீன் வில்லேஜில் சர்வதேச அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அமைந்துள்ளன.

இதனை தொடர்ந்து அங்கு நடந்த 2வது வெடிகுண்டு தாக்குதலை அடுத்து துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டு உள்ளது.  இதில் அருகிலுள்ள பெட்ரோல் நிலையம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.  நேற்றிரவு நடந்த இந்த தாக்குதலில் வான்வரை புகை கிளம்பி சென்றது.

இதுவரை 5 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.  50 பேர் காயமடைந்து உள்ளனர்.  அனைத்து பொதுமக்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர் என உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி ரஹிமி கூறியுள்ளார்.  இந்த பலி எண்ணிக்கை உயர கூடும் என்றும் கூறப்படுகிறது.

Next Story