ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் தவறான பிரசாரம்


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் தவறான பிரசாரம்
x
தினத்தந்தி 10 Sep 2019 11:08 AM GMT (Updated: 10 Sep 2019 11:08 AM GMT)

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் காஷ்மீர் குறித்து பாகிஸ்தானின் தவறான பிரசாரம் தொடர்கிறது. ஜம்மு காஷ்மீரை உலகின் மிகப்பெரிய சிறைச்சாலையாக மாற்றி உள்ளதாக கூறி உள்ளது.

ஜெனீவா,

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370வது பிரிவை இந்தியா ரத்து செய்ததிலிருந்து, பாகிஸ்தான் இந்த பிரச்சினையை சர்வதேசமயமாக்க முயற்சித்து வருகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் (யு.என்.எச்.ஆர்.சி) 42வது அமர்வில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி, ஜெனீவாவில் தனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி உரை நிகழ்த்தினார். 

அப்போது ஆவணத்தின் தொடக்கப் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தேசிய மாநாட்டின் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோரின் வார்த்தைகள் மேற்கோள் காட்டப்பட்டன.

ஜம்மு காஷ்மீர்  மக்களுக்கு அவர்களின் சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகள் குறைக்கப்பட்டு 20 நாட்கள் ஆகின்றன. நாங்கள் ஸ்ரீநகரை பார்வையிட முயன்றபோது எதிர்க்கட்சி மற்றும் பத்திரிகை தலைவர்கள் ஜம்மு காஷ்மீர்  மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட கடுமையான நிர்வாகம் மற்றும் முரட்டுத்தனம் தெரிந்தது என ராகுல்காந்தி கூறியதையும், 

இந்திய அரசின்  ஒருதலைப்பட்ச மற்றும் அதிர்ச்சியூட்டும் முடிவுகள் தொலைநோக்கு மற்றும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இது காஷ்மீரிகளுக்கு எதிரான ஆக்கிரமிப்பு. முடிவுகள் ஒருதலைப்பட்சமான, சட்டவிரோதமான மற்றும் அரசியலமைப்பிற்கு முரணானவை. ஒரு நீண்ட, கடினமான போர் முன்னால் உள்ளது. நாங்கள் தயாராக இருக்கிறோம் என உமர் அப்துல்லா கூறியதையும் பாகிஸ்தான் மந்திரி சுட்டி காட்டினார்.

குரேஷி,  இந்திய அரசு மீது போலி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஜம்மு-காஷ்மீருக்காக ஒரு நிலைப்பாட்டை எடுத்து காஷ்மீரிகளுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யுமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினர்களை குரேஷி கேட்டுக்கொண்டார். உறுப்பினர்களை ஈர்க்கும் வகையில் பேச பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி குரேஷி இந்திய அரசாங்கத்தை கொலைகார மற்றும் தவறான ஆட்சி என்று அழைத்தார். ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் உள் விஷயம் அல்ல, இது சர்வதேச அக்கறை கொண்ட பிரச்சினை என்று குரேஷி கூறினார்.பல காஷ்மீரிகள் இந்தியாவில் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரில் துருப்புக்களின் எண்ணிக்கை 7 லட்சத்திலிருந்து 10 லட் சத்திற்கும்  அதிகமாக அதிகரித்து உள்ளது என கூறினார்.

இதற்கு இந்தியா தரப்பில் இன்று  பதில் அளித்து பேச திட்டமிடப்பட்டுள்ளது. அஜய் பிசாரியா, மீண்டும் பாகிஸ்தானை அம்பலப்படுத்தவும், குரேஷி முன்வைத்த வாதங்களை தகர்க்கவும்  வாய்ப்பைப் பயன்படுத்துவார் என கூறப்படுகிறது.

Next Story