பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம்
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கராச்சி
பாகிஸ்தான் சிந்த் மாகாணம், லார்கானாவில் நம்ரிதா சாந்தினி என்ற இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண், விடுதியில் தங்கியிருந்து பல் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் விடுதி அறையில் கடந்த திங்கள்கிழமை மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தார். அறை பூட்டப்பட்ட நிலையில், கழுத்தில் கயிறு இருகி, கட்டிலில் அவர் உயிரிழந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? இல்லை தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நம்ரிதா சாந்தினியின் மரணத்துக்கான காரணம் குறித்து தற்போதைக்கு எதையும் தெரிவிக்க இயலாது என்று கராச்சி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், இந்த சம்பவத்தை கண்டித்து கராச்சியின் பல்வேறு இடங்களில் மக்கள் நேற்று போராட்டங்களில் ஈடுபட்டனர். நம்ரிதாவின் சகோதரர் நிருபர்களிடம் கூறும் போது, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
நம்ரிதாவின் கழுத்துப் பகுதி கேபிள் வயரால் இறுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
இதேபோல் சிந்த் பல்கலைக்கழகத்தில் நைலா ரிந்த் என்ற மாணவி, கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி ஃபேனில் தூக்குப் போட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
Related Tags :
Next Story