அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு


அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு
x
தினத்தந்தி 28 Sep 2019 5:21 AM GMT (Updated: 28 Sep 2019 5:21 AM GMT)

அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் வாக்குச்சாவடியில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதைய அதிபர் அஷ்ரப் கானியின் ஐந்தாண்டு பதவிக்காலம்  விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் இரண்டு சுற்றுகளாக நடைபெறும். 

முதல் சுற்றில் எந்த வேட்பாளருக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வேட்பாளர்களுக்கு இடையே மீண்டும் போட்டி நடைபெறும். அதிபர் பதவிக்கான போட்டியில் தற்போதைய அதிபர் அஷ்ரப் கானி (சுயேட்சை),  தலைமை நிர்வாகியான அப்துல்லா (ஆப்கானிஸ்தான் தேசிய கூட்டணி) உள்ளிட்ட 18 வேட்பாளர்கள் உள்ளனர்.  தேர்தல் பிரச்சாரங்களில் வன்முறைகள் நடைபெற்றதால், வாக்குப்பதிவு நடைபெறும் நாளான இன்று நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கின்றனர். வாக்குச்சாவடிகளில் தாக்குதல் நடத்துவோம் என தலீபான்கள் மிரட்டல் விடுத்து இருந்ததால், வாக்குச்சாவடிகளிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Next Story