பிப்ரவரி 2020 வரை நிதி கண்காணிப்புக் குழுவின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் இருக்கும்


பிப்ரவரி 2020 வரை நிதி கண்காணிப்புக் குழுவின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் இருக்கும்
x
தினத்தந்தி 16 Oct 2019 12:31 PM GMT (Updated: 16 Oct 2019 12:31 PM GMT)

பிப்ரவரி 2020 வரை நிதி கண்காணிப்புக் குழுவின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமாபாத்

பணமோசடி, பயங்கரவாத குழுக்களுக்கு  நிதியுதவி அளிப்பது  மற்றும் சர்வதேச நிதி அமைப்பிற்கான பிற அச்சுறுத்தல்களை எதிர்த்து 1989 ஆம் ஆண்டில்  நிறுவப்பட்ட ஒரு அமைப்பு  நிதி கண்காணிப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்)  ஆகும். இந்த அமைப்பு பாரீசை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த நிதி கண்காணிப்புக் குழுவால் பாகிஸ்தான் கறுப்பு  பட்டியலில் இடம்பிடித்தது. பயங்கரவாதிகளுக்கு  நிதி வழங்குவது  மற்றும் பணமோசடிகளை முற்றிலுமாக நிறுத்தும் நடவடிக்கைகளை  2019 அக்டோபருக்குள் நிறுத்த வேண்டும். இல்லை என்றால்  ஈரான் மற்றும் வட கொரியாவுடன் கறுப்புப் பட்டியலில் இடம் பெறும் அபாயத்தை எதிர்கொள்ளும் என நித அமைப்பு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று பாரிஸில் நடந்த கூட்டத்தில், பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிகளைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் ஏற்கனவே எடுத்துள்ள நடவடிக்கைகளை  இந்த அமைப்பு ஆய்வு செய்தது. இந்த கூட்டத்தில் 205 நாடுகள், சர்வதேச நாணய நிதியம், ஐ.நா, உலக வங்கி மற்றும் பிற அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தானின் பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் ஹம்மத் அசார்  பயங்கரவாதத்திற்கு எதிராக தனது நாடு எடுத்துவரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார். சீனா, துருக்கி மற்றும் மலேசியா ஆகியவை பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கைகளை பாராட்டின.

ஹபீஸ் சயீத் தனது கணக்குகளில் இருந்து நிதியை எடுக்க பாகிஸ்தான் அனுமதித்ததை மேற்கோள் காட்டி பாகிஸ்தானை கறுப்புபட்டியலில் சேர்க்க இந்தியா பரிந்துரைத்து இருந்தது.

பயங்கரவாதிகளுக்கு  நிதிவழங்குவது  மற்றும் பணமோசடிகளை முற்றிலுமாக தடுக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதி கண்காணிப்பு குழு  (எஃப்ஏடிஎஃப்)  பாகிஸ்தானை மீண்டும் கேட்டு கொண்டு உள்ளது. இதை தொடர்ந்து கொள்கையளவில், 2020 பிப்ரவரி வரை பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் வைத்திருக்க  நிதி நடவடிக்கை பணிக்குழு  முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 2020 இல் பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்து இந்த அமைப்பு இறுதி முடிவை எடுக்கும். 4 மாதங்கள் வரை பாகிஸ்தானுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இடைக்கால முன்னேற்றங்கள் குறித்து முறையான அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்படும், இது  நிதி நடவடிக்கை பணிக்குழுவின்  தற்போதைய அமர்வின் கடைசி நாளாகும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆனால் பாகிஸ்தானின் நிதி அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒமர் ஹமீத் கான் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் நீடிப்பதை நிராகரித்தார். இது உண்மையல்ல, அக்டோபர் 18 ந்தேதிக்கு பிறகுதான் இதனை உறுதிப்படுத்த முடியும் என்று கூறினார்.

Next Story