3 பயங்கரவாத முகாம்கள் அழிப்பு: இந்தியாவின் கூற்றை நிராகரித்தது பாகிஸ்தான் ராணுவம்
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்ததாக கூறிய இந்தியாவின் தகவலை பாகிஸ்தான் இராணுவம் மறுத்து உள்ளது.
இஸ்லாமாபாத்,
காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தீட்வால் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியையொட்டி அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் நள்ளிரவு அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியையொட்டி ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மற்றும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட சண்டை நேற்று அதிகாலை 3 மணி வரை நீடித்தது.
இதில், பாகிஸ்தான் வீரர்கள் 10 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், பயங்கரவாதிகளின் 3 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.
ஆனால் இந்திய இராணுவம் கூறியதை "பொய்யானது" என்று பாகிஸ்தான் இராணுவம் மறுத்துள்ளது. பாகிஸ்தானின் இராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜ் ஜெனரல் ஆசிப் கஃபூர் நள்ளிரவு வெளியிட்ட ட்வீட்டில் ஜெனரல் ராவத்தின் கூற்றுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் கஃபூர் கூறி இருப்பதாவது;-
3 முகாம்களை அழித்ததாக கூறும் இந்திய இராணுவத் தலைவரின் அறிக்கை ஏமாற்றமளிக்கிறது. ஏனெனில் அவர் மிகவும் பொறுப்பான பதவியில் உள்ளவர். பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் எந்தவொரு வெளிநாட்டு தூதர் / ஊடகத்தையும் இதை நிரூபிக்க அழைத்துச் செல்வதை நாங்கள் வரவேற்கிறோம்.
மூத்த இந்திய இராணுவத் தலைமையின் தவறான கூற்றுக்கள் குறிப்பாக புல்வாமா சம்பவம் இப்பகுதியில் அமைதிக்கு தீங்கு விளைவிக்கும்.
இந்திய இராணுவத்தின் இத்தகைய தவறான கூற்றுக்கள் உள்நாட்டு நலன்களுக்கு ஏற்ப செய்யப்படுகின்றன. இது தொழில்முறை இராணுவ நெறிமுறைகளுக்கு எதிரானது என்று மேஜர் ஜெனரல் கஃபூர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story