இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இருந்து இந்திய வம்சாவளி எம்.பி. இடைநீக்கம்


இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இருந்து இந்திய வம்சாவளி எம்.பி. இடைநீக்கம்
x
தினத்தந்தி 1 Nov 2019 10:29 PM GMT (Updated: 1 Nov 2019 10:29 PM GMT)

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இருந்து இந்திய வம்சாவளி எம்.பி. இடைநீக்கம் செய்யப்பட்டார்.

லண்டன்,

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சி சார்பில் நீண்ட காலமாக எம்.பி.யாக இருப்பவர் கெயித் வாஸ் (வயது 62). இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர், ஆண் விபசாரிகளுக்காக போதைப்பொருள் வாங்க விருப்பம் தெரிவித்ததாகவும், ஆண் விபசாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் கடந்த 2016-ம் ஆண்டு புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து அவர் மீது நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில், கெயித் வாஸ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. எனவே அவரை 6 மாதம் இடைநீக்கம் செய்ய நிலைக்குழு பரிந்துரைத்தது.

அதன்படி கெயித் வாசை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, கெயித் வாஸ் அடுத்த 6 மாதங்களுக்கு நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இங்கிலாந்தில் அடுத்த மாதம் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் கெயித் வாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், அவர் முழு தண்டனை காலத்தையும் அனுபவிக்க வேண்டும் என நிலைக்குழு தலைவர் கதே கிரீன் கூறியுள்ளார்.

Next Story