காஷ்மீர் விவகாரம்; ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விடுத்த கோரிக்கையை திரும்ப பெற்றது சீனா


காஷ்மீர் விவகாரம்; ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விடுத்த கோரிக்கையை திரும்ப பெற்றது சீனா
x
தினத்தந்தி 17 Dec 2019 4:29 PM GMT (Updated: 17 Dec 2019 4:29 PM GMT)

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை சீனா திரும்ப பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெனீவா,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக சர்வதேச நாடுகளை நாடியது. ஆனால், சீனாவைத்தவிர பாகிஸ்தானுக்கு எந்த நாடும் சொல்லிக்கொள்ளும்படி இந்த  விஷயத்தில் ஆதரவு அளிக்கவில்லை.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலவரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்க வேண்டும் என்று சீனா கோரிக்கை விடுத்ததாகவும் இதன்படி, செவ்வாய்க்கிழமை காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 2-வது முறையாக ரகசிய ஆலோசனை நடத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.   ஆனால், ஐக்கிய நாடுகள் அவையின் 15 உறுப்புகள் நாடுகளுடன் (5 நிரந்தர உறுப்பு நாடுகள், 10 தற்காலிக உறுப்பு நாடுகள்)  இந்திய தூதரகம் தீவிர ஆலோசனை நடத்தியது. இதன் பயனாக சீனா விடுத்த கோரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக  செய்தி வெளியானது.

கடந்த 12 ஆம் தேதி, காஷ்மீரில் மேலும் பதற்றங்களுக்கு சாத்தியம் இருப்பதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷி  கவலை தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். 

Next Story