சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இந்திய ஆசிரியை பாதிப்பு


சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இந்திய ஆசிரியை பாதிப்பு
x
தினத்தந்தி 20 Jan 2020 7:07 AM GMT (Updated: 20 Jan 2020 8:11 AM GMT)

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்திய ஆசிரியை ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.

பெய்ஜிங்,

ஒரு புதிய கொரோனா வைரசால் ஏற்படும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் நோய் பாதிப்பு மத்திய நகரமான வுஹானில் தொடங்கியது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200இல்  இந்த நகரம் முதலிடத்தில் இருப்பதாக அதிகாரிகள் மற்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

தெற்கு சீனாவின் ஷென்சானில் சிலருக்கு இந்த பாதிப்பு இருப்பதாக  அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.   

ஷென்சான் நகரிலுள்ள பள்ளியொன்றில் பணிபுரிந்து வந்த இந்தியாவை சேர்ந்த பிரீத்தி மகேஸ்வரி எனும் ஆசிரியர், கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திங்களன்று அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட முதல் வெளிநாட்டவரான பிரீத்திக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வைரசின் பாதிப்பு, தொற்று நோய் மற்றும் கடுமையான சுவாச கோளாறை ஏற்படுத்தி உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும்.  இந்த கொரோனா வைரசின் பாதிப்பால் கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில், சீனா மற்றும் ஹாங்காங்கை சேர்ந்த 650 பேர் பலியாகினர். இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

கொரோனா வைரசின் பாதிப்பால், கொடிய சுவாச நோய் வருவதைத் தடுக்க இந்தியா எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்க வேண்டுமா? என்பது குறித்து மத்திய அரசு உலக சுகாதார அமைப்பை (WHO) அணுகியுள்ளது.

"இந்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கையாக உள்ளது. தேவைப்பட்டால், நாங்கள் அவசரமாக நடவடிக்கை எடுப்போம். இது குறித்து மக்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டுமா? என்பது குறித்து உலக சுகாதார அமைபப்புடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். அவர்களின் தொழில்நுட்ப ஆலோசனையின் பேரில் நாங்கள் செயல்படுவோம்" என்று சுகாதார அமைச்சகத்தின் பெயரிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

Next Story