சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 17 பேர் பலி; 571 பேருக்கு பாதிப்பு


சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 17 பேர் பலி; 571 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 23 Jan 2020 3:29 AM GMT (Updated: 23 Jan 2020 3:29 AM GMT)

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 17 பேர் பலியாகி உள்ளனர்.

பெய்ஜிங்,

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் தீவிரமுடன் பரவி வருகிறது. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.

முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன.

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு 1.1 கோடி பேர் வசித்து வரும் வுகானில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.  வைரஸ் தாக்குதலுக்கு முதலில் 3 பேர் பலியாகி உள்ளனர் என வுகான் நகர சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருந்தது.  இதனை தொடர்ந்து, வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வைரஸ் 440 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என்றும் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்து உள்ளது என்றும் சீன சுகாதார அதிகாரிகள் சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் தலா ஒருவரும், தாய்லாந்து நாட்டில் 3 பேரும், அமெரிக்கா மற்றும் தைவான் நாடுகளில் தலா ஒருவரும் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

இதனிடையே, சீன சுகாதார ஆணையம் இன்று காலை வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் 571 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.  சீனா முழுவதும் இதற்கு 17 பேர் பலியாகி உள்ளனர்.  இவர்களில் பெருமளவிலானோர் கடந்த டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி அறியப்பட்ட வுகான் வுகான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர் என தெரிவித்து உள்ளது.

அந்நாட்டுக்கு பயணம் செய்வது பற்றி இந்தியா முன்பே எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  வுகான் நகரில் மருத்துவம் மற்றும் பிற படிப்புகளை படித்து வரும் 700 இந்திய மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டனர்.  அவர்களில் பலர் விடுமுறையை முன்னிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

ஷாங்காய் நகரிலும் 7 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து வுகான் நகரில் பேருந்து போக்குவரத்து சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது.  ரெயில்வே நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் இன்று காலை 10 மணி முதல் சேவையை நிறுத்தி வைத்துள்ளது.

வுகான் நகர குடியிருப்புவாசிகள் வைரஸ் பரவாமல் இருப்பதற்காக முகமூடிகளை அணிந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story