கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எய்ட்ஸ் மருந்தை சோதனை செய்து பார்க்கும் சீனா


கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எய்ட்ஸ் மருந்தை சோதனை  செய்து பார்க்கும் சீனா
x
தினத்தந்தி 27 Jan 2020 9:58 AM GMT (Updated: 27 Jan 2020 10:15 AM GMT)

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எய்ட்ஸ் நோய்க்கு வழங்கும் மருந்தை கொடுத்து சீனா சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிகாகோ

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர்  எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்கத்தால் இதுவரை 2744  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹாங்காங், மெக்சிகோ மற்றும் தைவானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு,  சீனாவில் இருந்து வரும் பயணிகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

வுகானில் இன்னும் 250 இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வுகானில்  இருந்து இந்தியா திரும்பிய 11 பேரில் 4 பேருக்கு பாதிப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இந்தநிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் மருத்துவம் படிக்கும் அவர் இந்தியா திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுபோல் சீனாவில் இருந்து பாட்னா திரும்பிய பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் பாட்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், எச்.ஐ.வி நோய்க்கு அளிக்கப்படும் மருந்துகளை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பயன்படுத்துவது குறித்து சீன அரசு சோதனை செய்து வருவதாக ஏபிவீ (AbbVie) என்ற மருந்து நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவின் வடக்கு சிகாகோவில் இயங்கி வரும் இந்த  நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், சீன சுகாதாரத்துறை எச்.ஐ.வி.க்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பயன்படுத்துவது பற்றிய சோதனையில் ஈடுபட்டுள்ளது என கூறப்பட்டு உள்ளது.

நிறுவன செய்தி தொடர்பாளர் அடெல்லே இன்பான்டே கூறுகையில், இந்த நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவுமாறு சீன சுகாதார அதிகாரிகள் இந்த மருந்தைக் கோரினர்.

சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, லொபினவிர் (lopinavir) மற்றும் ரிடோனவிர் (ritonavir-)  இந்த இரண்டு மருத்துகளின்  கூட்டுக் கலவை மருந்து அலுவியா,  எச்.ஐ.விக்கு பயன்படுத்தப்படும் நிலையில், இதனை கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு இரண்டு வேளை மாத்திரைகள் அளித்து வருவதாகவும் சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது. மருந்து எடுத்துக்கொண்டவர்களுக்கு சில நாட்களில் வைரஸின் வீரியம் குறையும் பட்சத்தில் அடுத்தகட்ட சோதனைகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story