டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையா? - அவரே அளித்த பதில்


டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையா? - அவரே அளித்த பதில்
x
தினத்தந்தி 14 March 2020 11:20 PM GMT (Updated: 14 March 2020 11:20 PM GMT)

டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையா செய்யப்பட்டது குறித்து, அவரே பதில் அளித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள மார் எ லாகோ சொகுசு விடுதியில் ஜனாதிபதி டிரம்பை கடந்த வாரம் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோவும், தகவல்தொடர்பு தலைவர் பாபியோ வாஜின்கார்ட்டனும் சந்தித்து பேசினர்.

அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் ஜெயிர் போல்சொனரோவுக்கு பாதிப்பு இல்லை. ஆனால் பாபியோ வாஜின்கார்ட்டனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்து, வாஷிங்டனில் நேற்று முன்தினம் ஜனாதிபதி டிரம்ப் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவரிடம், “பாபியோ வாஜின்கார்ட்டனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நீங்கள் ஏன் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவில்லை?” என்று நிருபர்கள் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு டிரம்ப் பதில் அளிக்கையில், “நான் பரிசோதனை செய்து கொள்ளப்போவது இல்லை என்று சொல்லவில்லை. பெரும்பாலும் நானும் பரிசோதனை செய்து கொள்வேன். அந்த காரணத்துக்காக (பாபியோ வாஜின்கார்ட்டனுக்கு பாதிப்பு உள்ளதால்) அல்ல. நானும் செய்து கொள்ள வேண்டும் என்று கருதுவதால், அந்த பரிசோதனையை செய்து கொள்வேன்” என கூறினார்.

அதே நேரத்தில் தனக்கு அந்த வைரஸ் தாக்கத்துக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.


Next Story