கொரோனா வைரஸ் சூழ்நிலையை பணம் சம்பாதிக்க பயன்படுத்துவதா? - போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்டிப்பு


கொரோனா வைரஸ் சூழ்நிலையை பணம் சம்பாதிக்க பயன்படுத்துவதா? - போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்டிப்பு
x
தினத்தந்தி 8 April 2020 10:52 PM GMT (Updated: 8 April 2020 10:52 PM GMT)

கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலையும் தங்களுக்கு சாதகமாக்கி பணம் சம்பாதிப்பவர்களை போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்டித்தார்.

ரோம்,

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மிகக் கடுமையாக ஆளாகியுள்ள நாடுகளில் ஒன்று இத்தாலி. அங்கு இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பலியானோர் எண்ணிக்கையும் 17 ஆயிரத்தை கடந்து விட்டது.

அங்கு கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் சமூக குற்றங்களும் பெருகி வருகின்றன. சமூக மற்றும் பொருளாதார இடையூறுகளை சரிக்கட்டுகிற விதத்தில், லாபம் அடைவதற்காக பலரும் குற்றங்களை செய்கிறார்கள். இவர்களை அதிகாரிகள் எச்சரித்த வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையே அங்கு ஏசுபிரான் எருசலேம் நகருக்குள் நுழைந்ததை நினைவுகூரும் வழிபாடு, ஏசுபிரானின் சிலுவைப்பாடுகளையொட்டிய புனித வார வழிபாடுகள் நடந்து வருகின்றன.

வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று வழக்கம்போல வழிபாடு நடத்தினார். அப்போது அவர் பிரார்த்தனை செய்யும்போது, கொரோனா வைரஸ் பரவி வருவதை தங்களுக்கு சாதகமாக்கி பணம் சம்பாதிப்பவர்களை கண்டிக்கும் வாசகங்களை பயன்படுத்தினார். மற்றவர்களின் தேவைகளை ஈடுசெய்து, விற்று, பணம் சம்பாதிப்பவர்கள் மனங்களில் ஆன்மிக மாற்ற அனுபவம் பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஏசுபிரானை யூதாஸ் காட்டிக்கொடுத்ததையும் அவர் விவரித்தார். அப்போது அவர், “ஒவ்வொருவருக்குள்ளும் சின்னதாய் ஒரு யூதாஸ் இருக்கிறார்கள். அவர்தான் மற்றவர்களுக்கு நம்பிக்கையாக இருப்பதற்கும், சுய லாபத்தின் அடிப்படையில் செயல்படுவதற்கும் இடையேயான தேர்வை செய்கிறார். நம்மில் ஒவ்வொருவரும், துரோகம் செய்கிற திறனை பெற்றிருக்கிறோம். நமது சுய நலன்களுக்காக மற்றவர்களை விற்கிறோம்” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

கொள்ளை கும்பல்களை பற்றியும், வட்டிக்கு பணம் கொடுப்பவர்களைப்பற்றியும்கூட அவர் குறிப்பிட்டார். அதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “கடவுள் அவர்களது இதயங்களைத் தொட்டு மாற்றட்டும்” என்று கூறினார்.

Next Story