ஈராக்கில் நீண்டநாட்களுக்கு பின் புதிய பிரதமர் பதவி ஏற்பு


ஈராக்கில் நீண்டநாட்களுக்கு பின் புதிய பிரதமர் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 8 May 2020 1:27 AM GMT (Updated: 8 May 2020 1:27 AM GMT)

ஈராக்கில் புதிய பிரதமர் பதவி ஏற்று கொண்ட நிலையில் நீண்டநாட்களாக நிலவிய குழப்பம் நீங்கியது.

பாக்தாத்,

ஈராக்கில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதை கண்டித்து, பிரதமர் அப்துல் மஹ்திக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் நவம்பர் மாத இறுதியில் பிரதமர் பதவியை அப்துல் மஹ்தி ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு ஈராக்கின் புதிய பிரதமராக முன்னாள் தகவல் தொடர்புத்துறை மந்திரி முகமது தவுபிக் அலாவியை, அதிபர் பர்ஹாம் சாலி நியமித்தார். ஆனால் புதிய மந்திரிசபை அமைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் போதுமான ஆதரவு கிடைக்காததால், முகமது தவுபிக் அலாவி பதவி விலகினார்.

அதனை தொடர்ந்து, உளவுத்துறையின் முன்னாள் தலைவர் முஸ்தபா அல் காதிமி புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் ஈராக்கின் புதிய பிரதமர் பதவி ஏற்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது.

இந்த நிலையில் முஸ்தபா அல் காதிமி தலைமையில் புதிய மந்திரிசபை அமைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் உள்ள 255 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் முஸ்தபா அல் காதிமிக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதனை தொடர்ந்து ஈராக்கின் பிரதமராக முஸ்தபா அல் காதிமி அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்றார். மேலும் அவரது தலைமையிலான மந்திரி சபையில் 15 மந்திரிகள் பதவி ஏற்றனர்.

Next Story