சீனாவில் பரிதாபம்; பள்ளி மாணவர்கள் 8 பேர் ஆற்றில் மூழ்கி பலி
சீனாவில் பள்ளி மாணவர்கள் 8 பேர் ஆற்றில் மூழ்கி பலியாகினர்.
பீஜிங்,
சீனாவின் சிச்சுவான் மாகாணம் டோங்னன் நகரில் தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு படித்து வரும் மாணவர்கள் சிலர் பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது மாணவர்களில் ஒருவன் திடீரென ஆற்றில் மூழ்கினான். இதையடுத்து அவனை காப்பாற்றுவதற்காக உடனிருந்த சக மாணவர்கள் 7 பேரும் ஆற்றில் குதித்தனர்.
ஆனால் அவர்களும் ஆற்றில் மூழ்கினர். இதுபற்றி தகவல் தெரிந்ததும் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் மாணவர்கள் 8 பேரையும் பிணமாகத்தான் மீட்க முடிந்தது. ஒரே சமயத்தில் மாணவர்கள் 8 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story